கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயில், உலக புகழ்பெற்ற யுனஸ்கோவால் அங்கரிக்கப்பட்டதாகும். இக்கோயிலில் தேங்கியுள்ள மழை நீரால் பாசிகள் படர்ந்து, விஷ ஜந்துக்களால் நோய் பரப்பும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளது. கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகும். இங்கு அடிக்கு 1008 சிற்பங்கள் என கூறுவார்கள். கோயில் வளாகம் முழுவதும் நுணுக்கமான சிலைகள் முதல் பிரமாண்டமான சிலைகள் வரை தத்ரூபமாக சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கும். இதனால் தினந்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட வெளிநாடு, வெளியூர், வெளிமாவட்டத்தில் உள்ளவர்கள் சுற்றுலாவாகவும், இளைஞர்கள், கல்வியாளர்கள், வெளிநாட்டில் படிக்கும் கட்டிட பொறியாளர்கள் என கோயிலுக்குள் வந்து பார்வையிட்டும், தங்களக்கு வேண்டிய குறிப்புகளை எழுதி கொண்டும் செல்வார்கள். மேலும் சுற்றுலா வருபவர்கள், கோயிலின் உள்ளே உள்ள சுவாமியை தரிசனம் செய்வதற்கும் வந்து செல்வார்கள். தற்போது கொரோனா தொற்று விதிமுறைகள் இருப்பதால், வெளி மாநில, மாவட்ட, உள்ளூர் பக்தர்கள் மட்டும் வந்து செல்கின்றனர்.




இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் கடந்த 10 நாட்களாக பெய்த வரும் பலத்த மழையினால் சிவன் மற்றும் அம்மன் கோயிலின் நந்தி மண்டபம், பிரகாரத்தில் மழை நீர் நிற்கின்றது.   மேலும் பல நாட்களாக மழை நீர் தேங்கியுள்ளதால், விஷ ஜந்துக்கள் உற்பத்தியாகி தண்ணீர் நிறமாறி துர்நாற்றம் வீசுகின்றது.  மேலும் அந்த நீரில் பூச்சிகள், விஷ ஜந்துக்கள் இருப்பதால்,  கோயிலுக்கு வரும்  பக்தர்கள், தேங்கியுள்ள மழை நீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த தண்ணீரில்,  பக்தர்கள், கோயில் ஊழியர்கள், சுற்றுலா வாசிகள், அதில் நடந்து செல்வதால், அரிப்புகள் ஏற்பட்டு, தோல்கள் தடிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.


மேலும் கோயிலின் மதில் சுவர் ஒரத்திலுள்ள தண்ணீர் செல்லும் பகுதியில், பல நாட்களாக தேங்கியுள்ள மழை நீரால், பாசிகள் படர்ந்து, தவளைகள், விஷ ஜந்துக்கள், பூச்சிகள் உற்பத்தியாகியுள்ளது. மேலும் வருடந்தோறும் வரும் மழை காலத்தில் இந்நிலை ஏற்படுவதால், கோயில் முழுவதும் தற்போது அதிகமாக துர்நாற்றமும், கொசுக்கள் தொல்லையாகி வருகின்றது. தற்போது துர்நாற்றத்தாலும், கொசுக்களாலும் கோயிலுக்குள் வருவதற்கே பக்தர்களும் அச்சமடைந்துள்ளனர். மழை நீர் வடியாதது குறித்து, அங்குள்ளவர்களிடம் கேட்டபோது,  கோயிலில் தேங்கும் மழை நீர், கோயிலின் எதிரிலுள்ள குளத்திற்கு செல்லும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டன.




ஆனால் குழாயை பள்ளமாகவும், மேலோட்டமாகவும் போட்டதால், தண்ணீர் செல்லாமல், கோயில் வளாகத்தில் தேங்கி நிற்கின்றது.   தற்போது தண்ணீர் பூமியிலிருந்து தண்ணீர் ஊறி வருவதாலும், குளத்தில் தண்ணீர் செல்ல முடியாததால், தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது மின் மோட்டாரை கொண்டு தண்ணீரை குழாய் மூலம் தண்ணீரை வெளியேற்றினாலும், போதுமான அளவில் தண்ணீர் வெளியேறாததால், பூமிக்கடியிலுள்ள தண்ணீர் ஊறி வெளியேறுவதால், தண்ணீர் குறையாமல் உள்ளது. இதனிடையில் கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்திய தொல்லியத்துறை உயரதிகாரிகள், மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக கோயிலுக்கு வந்து நேர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


அப்போது  பல்வேறு உத்தரவுகளை போட்டும், இனி வருங்காலத்தில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து சென்றார்.  ஆனால் அதன் பின் அவரது உத்தரவை காற்றில் பறக்க விடப்பட்டது. மத்திய அரசிடமுள்ள தொல்லியத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் நோய் பரப்பும் இடமாக மாறியுள்ளதை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையான விஷயமாகும். எனவே  மாவட்ட நிர்வாகம், மழை நீரில் பாசிகள் படர்ந்தும், விஷ ஜந்துக்கள் உற்பத்தியாகியுள்ளதை, போர்கால அடிப்படையில் தண்ணீரை இறைத்து துாய்மை படுத்திட வேண்டும், தவறும் பட்சத்தில் பக்தர்களின் வருகை  முற்றிலும் குறைந்து விடும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.