மக்களின் அலைச்சலை போக்க "நமது அங்காடி" பெயரில் வாட்ஸ்அப் குரூப் அமைத்த ரேஷன் கடை ஊழியர் முயற்சிக்கு கிடைத்தது பலன்.

 

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசி அட்டைதாரர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் தற்பொழுது கொரோனா நிவாரணம் மற்றும் மளிகை தொகுப்பு அரிசி அட்டைதாரர்களுக்கு இன்று முதல் வழங்கப்பட உள்ளது. அதனையடுத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்குச் சென்று டோக்கன் வழங்கப்பட்டு அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு மட்டும் பொருட்கள் வழங்கப்படும் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் மற்ற நாட்களில் நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் "நமது அங்காடி" என்ற ஒரு வாட்ஸ்அப் குரூப்பை உருவாக்கி அதன் மூலம் மக்களுக்கு தேவையானவற்றை அதில் பதிவிட்டு வருகிறார் ரேஷன் கடை ஊழியர்.



 

ரேஷன் கடைகளில் என்ன பொருள்கள் உள்ளது, எப்போது ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என அன்றாடம் "நமது அங்காடி" என்ற வாட்ஸ் அப் குரூப் மூலம் மக்களின் அலைச்சலை போக்கும் வகையில், தகவல்களை அனுப்பி வரும் ரேஷன் கடை ஊழியரை பலரும் பாராட்டியுள்ளனர்.
  



தஞ்சாவூர் அடுத்த கரந்தை பகுதியில் செயல்பட்டு வரும் ஏபி002 என்கிற ரேஷன் கடையில், 1,350 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைதாரர்களில் மொபைல் உள்ளவர்களின் நம்பர்களை வாங்கி, "நமது அங்காடி" என்ற வாட்ஸ்அப் குரூப்பை உருவாக்கி, அதில் அன்றாடம் கடையில் உள்ள பொருள்களின் இருப்பு,  கடை செயல்படும் நேரம், அன்றைய தினம் எந்த குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் வழங்கபடவுள்ளது உள்ளிட்ட விபரங்களை கடையின் விற்பனையாளர் கணேசன் அளித்து வருகிறார். இதனால் கடையில் கூட்டம் கூடுவதும் குறைந்து, மக்கள் அலைச்சல் இன்றி பொருள்களை வாங்கி செல்ல வசதியாக உள்ளதால், அவரின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர். 

 

இது குறித்து கணேசன் கூறியதாவது; பொதுமக்கள் தினமும், கடைக்கு வந்து என்ன பொருள்கள் உள்ளது. எப்போது பொருள்கள் வழங்குவீர்கள் என கேள்வி கேட்பதால், எங்களுடைய வேலையின் நேரமும் அதிகமாகிறது. அனைவருக்கும் பதில் சொல்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. அத்துடன், கொரோனா தொற்று காலத்தில் கூட்டம் கூடுவதை தடுக்கும் விதமாக, வாட்ஸ் ஆப் குரூப்பை உருவாக்கி அதில் தினமும் அனைத்து தகவல்களையும் பதிவிடுவதால் தற்போது பொதுமக்கள் கடைக்கு வருவது முற்றிலும் குறைந்துள்ளது. 



அதன்படி அன்றைய தினம் எந்த குடும்ப அட்டைகளுக்கு பொருள் வழங்கப்படுகிறதோ,  அவர்கள் மட்டும் வாங்கி செல்வதால், எங்களுக்கும் வேலை சுமை குறைகிறது. அவர்களுக்கும் அலைச்சல் குறைகிறது. மேலும், சில குடும்ப அட்டைதாரர்கள் அப்பகுதிகளில் இல்லாமல், வேறு சில பகுதிகளில், வேறு மாவட்டங்களில் இருப்பதாலும், இங்கு இல்லாதவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் பொருட்கள் வழங்குவது குறித்து தகவல் தெரிவிப்பதால், அவர்கள் அன்றைய தினம் மட்டும் வாங்கிச் செல்வது அவர்களுக்கு எளிதாக உள்ளது. இதில் மொபைல் இல்லாத நபர்கள் வரும் பட்சத்தில் அவர்களுக்கு பொருட்கள் எல்லா நாட்களிலும் வழங்கப்படுகிறது என்றார். 

 

ஏதோ கடமைக்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு மத்தியில், ஒரு முன்னோடியாக செயல்படும் இந்த ரேஷன் கடை ஊழியரின் செயலை, அப்பகுதியினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.