தஞ்சாவூர்: ஹெல்மேட் அணிந்து வந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஜோதி அறக்கட்டளையுடன் இணைந்து தஞ்சை போக்குவரத்து போலீசார் பூண்டு கொடுத்து அசத்தினர்.
 
தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற இரு-சக்கர வாகனம் இயக்கும் போது ஹெல்மேட் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டுனர்களுக்கு ரூ.1000 அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆசிஷ் ராவத் ஆலோசனையின் பேரில் தஞ்சாவூர் நகர உட்கோட்ட போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நூதன முறையில் ஏற்படுத்தி வருகின்றனர்.


அந்த வகையில் கடந்த மாதங்களில் ஹெல்மேட் அணிந்து வரும் வாகன ஓட்டுனர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு வெள்ளி காசு , பெட்ரோல் மற்றும் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து விற்பனையான நேரத்தில் தக்காளி போன்றவற்றை விலையில்லாமல் பரிசாக கொடுத்து அசத்தினர். இது ஹெல்மேட் அணிந்து வந்தவர்களுக்கு உற்சாகத்தையும்,  ஊக்கத்தையும் ஏற்படுத்தியது.


இந்நிலையில் “ பூண்டு இதயத்தை காக்கும் , ஹெல்மெட் தலைமுறையை பாதுகாக்கும் ” என்ற தலைப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே நடைபெற்றது. ஜோதி அறக்கட்டளையினர் மற்றும் தஞ்சை நகர உட்கோட்ட போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டுனர்களை ஊக்குவிக்கும் வகையில் தஞ்சாவூர் நகர உட்கோட்ட போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ரவிச்சந்திரன் 50 வாகன ஓட்டுனர்களுக்கு தலா 1 கிலோ பூண்டு விலையில்லாமல் வழங்கினார் .     


பின்னர் இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ரவிச்சந்திரன் கூறுகையில், இரு சக்கர வாகன விபத்தில் தலையில் ஏற்படும் காயத்தினால்தான் 90 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். உலக சுகாதார மையம் அறிவிக்கையின்படி ஹெல்மெட் அணிவதால் 70 சதவீதம் படுகாயம் மற்றும் 30 சதவீதம் உயிரிழப்பை தடுக்கலாம். அதே போன்று உணவில் பூண்டு சேர்ப்பது இதயத்தை பலமாக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தற்போது பூண்டின் விலை உயர்ந்து வரும்  நிலையில் “ உணவில் பூண்டு சேர்ப்பது இதயத்தை காக்கும் , இரு சக்கர வாகனம் இயக்கும்போது ஹெல்மெட் அணிவது நமது தலையை மட்டுமல்ல நமது தலைமுறையையும் சேர்த்தே பாதுகாக்கும் ” என்ற கருத்துருவில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


மேலும் தற்போது கடுமையாக விலை உயர்ந்துள்ள பூண்டை விலையில்லாமல் வாகன ஓட்டிகளுக்கு வழங்குவதன் மூலம் பொதுமக்களுக்கும் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு எளிதில் சென்றடையும். இவ்வாறு அவர் கூறினார். 


தற்போது ஒரு கிலோ பூண்டு 500 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகும்  நிலையில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பரிசாக விலையில்லாமல் பூண்டு வழங்கப்பட்டதை அறிந்து வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சி அடைந்து போக்குவரத்து போலீசார் மற்றும் ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகளை பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்