அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்- தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பிரத்யேக தனி வார்டு

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 2 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 2 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 

Continues below advertisement

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக செல்கிறார்கள். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

வார்டு-100... டெங்குவால் பாதித்தவர்களுக்காக

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வார்டு-100 என தனி வார்டு அமைக்கப்பட்டு அங்கு படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் படுக்கையை சுற்றிலும் கொசுவலைகளும் பொருத்தப்பட்டுள்ளன. டெங்குவினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்கள் குழுவும் தயார்  நிலையில் உள்ளது.

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 2 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 2 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களும் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்கள்.

இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர்  பாலாஜிநாதன் கூறியதாவது: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 2 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிப்புகள் அதிகம் இல்லை என்றாலும் டெங்கு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்

எனவே வீடுகளை சுற்றி  மழைகாலங்களில் நல்ல தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். வீடுகளை சுற்றிலும் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை போன்றவற்றில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடுகளை சுற்றிலும் தேவையில்லாத பொருட்களை சேகரித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டின் மாடிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை மூடி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

எட்டாவது இடத்தில் உள்ளது தஞ்சை

தமிழகத்தில் டெங்குவினால் பாதிக்கப்படும் மோசமான மாவட்டங்களில் தஞ்சை 8வது இடத்தில் உள்ளது. எனவே நாம் தீவிர கவனம் செலுத்தினால் டெங்கு பாதிப்பினை தடுக்கலாம். இதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரத்யேகமாக வார்டு-100 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. எனவே யாரும் பயப்பட தேவை இல்லை. காய்ச்சல் இருந்தால் ஒரு நாட்களுக்கு மேல் இருந்தால் ரத்த பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தால் உயிர் பாதிப்பு இல்லாமல் காப்பாற்ற முடியும். எனவே கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்தினால் டெங்கு பரவுவதை தடுக்கலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நம்பிக்கையுடன் சிகிச்சை பெற வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கு முழுமையான காரணமாக மருத்துவமனையின் முதல்வர் பாலாஜிநாதன் விளங்குகிறார். மக்கள் சேவையே முக்கியம். அவர்களின் நோய்களை தீர்க்கும் இடமாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விளங்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் தஞ்சை மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், மன்னார்குடியில் இருந்தும் நோயாளிகள் தஞ்சை மருத்துவமனைக்கு வந்து சிகிக்சை பெற்று நலமுடன் திரும்புகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola