தஞ்சாவூர்: தஞ்சை அருகே சாலை திடீரென்று உள் வாங்கியதால் பள்ளியக்ரஹாரம் – தென்பெரம்பூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.


தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.


கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலம் தஞ்சை பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றின் இடதுகரையில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பூமிக்கு அடியில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தஞ்சை அருகே வெண்ணாற்றின் வலது கரையில் அமைக்கப்பட்டிருந்த குழாயில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் கசிய தொடங்கியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.


தொடர்ந்து தண்ணீர் கசிவு இருந்ததால், சாலைக்கு அடியில் மண் அரிப்பு ஏற்பட்டு கொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென சாலை சுமார் 10 அடி நீளத்துக்கு உள்வாங்கியது.


சாலை திடீரென உள்வாங்கியதை அந்த பகுதியில் இருப்பவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்கள் மத்தியில் இந்த தகவல் பரவி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடன் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் சாலை திடீரென்று உள்வாங்கியதால் முன்னெச்சரிக்கையாக பள்ளியக்ரஹாரம் - தென் பெரம்பூர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.




மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து செல்லாதவாறு பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், குழாய் பதித்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதில் கசிவு இல்லாத வகையில் அடிக்கடி ஆய்வுகள் நடத்த வேண்டும். தண்ணீர் கசிவு இருப்பது குறித்து தெரிவித்தாலும் உடன் நடவடிக்கை எடுப்பதில்லை. இப்படி கசிவு ஏற்படும் இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு இருசக்கர வாகனங்கள் எதிரில் வரும் வாகனத்திற்காக ஒதுங்கினால் சரிந்து விழும் நிலை உள்ளது. எனவே நீர் கசிவு இருக்கிறதா என்பதை அடிக்கடி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.


இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் தற்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த உள்வாங்கிய சாலையை சரியாக முறைப்படி சீரமைக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படி ஒரு பிரச்னை ஏற்படாமல் இருக்க இப்போதே சீரமைக்க வேண்டும். இரவு நேரத்தில் இப்படி சாலை உள்வாங்கி இவ்வழியே செல்லும் வாகனங்கள் அதில் சிக்கியிருந்தால் பெரும் அவதி ஏற்பட்டு இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.