மீனே மீனம்மா... தண்ணீர் இல்லாமல் வரலையேம்மா: ஆற்று மீனுக்காக காத்திருக்கும் மக்கள்

சுடச்சுடச் சோற்றுடன் சூடான மீன் குழம்பும், அதற்குத் தொட்டுக்கொள்ள இரண்டு வறுத்த மீன் துண்டுகளும் இருந்தால் போதும்... மீன் பிரியர்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்தே போய்விடுவார்கள்.

Continues below advertisement

தஞ்சாவூர்: இல்லையே... வரத்து இல்லையே என்று மீன் உணவு பிரியர்கள் பரிதவிக்கின்றனர். எதற்காக தெரியுங்களா? ஆறுகளில் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீன் சந்தைகளில் ஆற்று மீன்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுதான் காரணம்.

Continues below advertisement

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்து வெச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதய்யா... இந்தப் பாட்டை ரசிக்காத மீன் உணவு பிரியர்கள் இருக்கவே முடியாது. சிலருக்கு மீன் உணவுகளைப் பார்க்கும்போது மட்டுமல்ல, மீன் என்று சொன்னாலே நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். அந்த அளவுக்குப் பலரின் நாக்குடன் சேர்த்து மனதையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது ஆற்று மீனின் ருசி. ஆட்டு இறைச்சியை விரும்பாத அசைவப் பிரியர்கள்கூட மீனை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். காரணம் அதில் உள்ள தனிப்பட்ட சுவைதான்.


மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மட்டுமின்றி மீன்பிடித் தொழிலும் நடந்து வருகிறது. இந்த ஆற்று மீனை பிடித்து குடும்பத்தை நடத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகம்தான். ஆறுகளில் வரும் தண்ணீர் ஏரிகளிலும், குளங்களிலும் நிரப்பப்படும். அவ்வாறு நீர் நிரப்பப்பட்ட ஏரிகளிலும், குளங்களிலும் ஆற்றிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து மீன்களும் வருவதால் ஏரி, குளங்களில் இயற்கையாக வளர்ந்து வருகிறது.

பின் அவை குத்தகைக்கு விடப்பட்டு மீன்கள் வளர்ந்தபின் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். அதுமட்டுமின்றி ஆறுகளிலும், சிறு கால்வாய்களிலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வலைவரித்து மீன்பிடித்து ஆற்றங்கரை ஓரத்திலும் அதைய ஒட்டியுள்ள பகுதிகளிலும் தரைக்கடைகள் அமைத்து விற்பனை செய்வது வழக்கம். இந்த மீன்கள் செம ருசியாக இருக்கும் என்பதால் இதை பல கிலோ மீட்டர் தொலைவில் இருப்பவர்கள் கூட தேடி வந்து வாங்கி செல்வார்கள். இன்னும் சிலர் ஆற்று மீன்களை பிடித்து கூடைகளில் எடுத்துச் சென்று தெருக்களிலும், சந்தைகளிலும் கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம்.


ஆறுகளில் பிடிக்கப்படும் பல்வேறு வகையான மீன்கள் வளர்ப்பு மற்றும் கடல்மீன்களை விட ருசி மிகுந்தவை என்பதால் ஆற்று மீன்களுக்கான தேவை எப்போதும் இருக்கும். இதனால்தான் ஆற்றுப்பகுதிகளில் விடுமுறை நாட்களில் சிறுவர்கள் கூட தூண்டில் எடுத்துச் சென்று வீட்டுக்கு தேவையான மீன்களை பிடித்து வருவார்கள். இதையே வியாபாரமாக செய்பவர்களும் உள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் இந்த ஆற்று மீன்களை விற்பனை செய்வதில் கிடைக்கும் பணத்தை நம்பியே வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆறுகளில் தற்போது தண்ணீர் வரத்து இல்லாததால் நாட்டு மீன் பிடித்தொழில் முற்றிலும் தடைபட்டுள்ளது.

இதனால், கடைகளிலும், மார்கெட்டிலும் வளர்ப்பு மற்றும் கடல் மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்படும் ஓரிரு வகை ஆற்று மீன்கள் அதன் சராசரி விலையைவிட அதிகமான விலைக்கே சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதை நடுத்தர குடும்பத்தினர் வாங்க முடியாத நிலை உள்ளது. தஞ்சையில் குறிப்பாக விரால் மீன்கள் கிலோ ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. கெண்டை மீன்கள் கிலோ ரூ.450 முதல் விற்பனை செய்யப்படுகிறது. போதிய அளவில் வரத்து இல்லையெனினும் சந்தைகளில் ஆற்று மீன்களுக்கான தேவை அதிகமாகவே உள்ளது.

கேரளா உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிக்கு ஆற்று மீன்கள் உயிருடன் கொண்டு வரப்படுகின்றன. இருப்பினும் வாகன போக்குவரத்துக்கான செலவுகளுடன் சேர்த்து மீன் விலை அதிகரிக்கிறது. இதனால் பட்ஜெட் போட்டு வாழும் மீன் உணவு பிரியர்களுக்கு அதை வாங்க இயலாத நிலை உள்ளது. ஒரு தட்டில் சுடச்சுடச் சோற்றுடன் சூடான மீன் குழம்பும், அதற்குத் தொட்டுக்கொள்ள இரண்டு வறுத்த மீன் துண்டுகளும் இருந்தால் போதும்... மீன் பிரியர்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்தே போய்விடுவார்கள். மீனுக்கும் அதன் காதலர்களுக்கும் உள்ள ஆழமான பந்தத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. இதனால் எப்போது ஆற்றில் தண்ணீர் வரும் எப்போது சுவையாக ஆற்று மீன் சாப்பிடுவோம் என்ற ஏக்கத்துடன் உள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola