தஞ்சாவூர்: படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம்” (NEEDS) என்ற திட்டத்தை கடந்த 2012ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


படித்த இளைஞர்கள் அதிகளவில் பயன்பெற வயது உச்சவரம்பு அதிகரிப்பு


இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளதாவது: இத்திட்டத்தில் நடப்பு நிதியாண்டான 2024-25ல் படித்த இளைஞர்கள் அதிகளவில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் வயது உச்சவரம்பினை 45 லிருந்து 55 வயதாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின்கீழ் 2024-25ஆம் நிதி ஆண்டிற்கு 57 நபர்களுக்கு 559 இலட்சம் மானியமாக வழங்கிட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் +2, பட்டப்படிப்பு, பட்டய படிப்பு (டிப்ளமோ), ஐ.டி.ஐ. அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சியை கல்வித்தகுதியாக பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு மூன்று வார காலம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து பின்னர், வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.


TVK Manadu: தவெக முதல் மாநாடு... போலீஸ் கேட்ட 21 கேள்விகள்... பதிலை தயார் செய்த தலைவர் விஜய்?


உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் தொடங்கலாம்


இத்திட்டத்தின்கீழ், திட்ட மதிப்பீடு ரூ.10 இலட்சத்திற்கு மேல், அதிகபட்சமாக ரூ.500 இலட்சம் வரையிலான உற்பத்தி மற்றும் சேவைத்தொழில் துவங்கலாம். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவிகிதமும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வயதுவரம்பு பொது பிரிவினருக்கு 21க்கு மேல் 45க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினருக்கு (மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) அதிகபட்ச வயது 55 ஆகும்.


பயனாளிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. இத்திட்டத்தின்கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பிட்டில் 25 % (அதிகபட்சமாக ரூ.75 இலட்சம் வரை) முதலீட்டு மானியம் 3 % வட்டி மானியமும் அளிக்கப்படும். சிறப்பு பிரிவினரான மகளிருக்கு இத்திட்டத்தின் கீழ் 50 % ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தகவல்


மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ள படித்த தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.msmeonline.tn.gov.in/needs ஆகும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளவும். (தொலைபேசி எண்.257345/255318) கைப்பேசி எண்.9788877322


மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகத்தின் சார்பில் இத்திட்டத்தில் கடந்த ஆண்டு 166 நபர்களுக்கு வங்கி ஒப்பளிப்பு ஆணை மற்றும் 1063.36 இலட்சம் கடன் தொகையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்று இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்.