தஞ்சை என்றால் பெரிய கோவிலும் அதற்கு அடுத்தார்போல் அரண்மனையும் நினைவுக்கு வரும். அதையும் தாண்டி சரஸ்வதி மஹால் நூலகம் மிகவும் பெருமை வாய்ந்தது. சுமார் 617 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1400 களிலே) இருந்த சோழர்கள் காலத்தில் தோன்றி அவர்கள் பணியால் வளர்ச்சியடைந்து, பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டு, தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் மேலும் சிறப்பான வளர்ச்சியை பெற்று இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பற்ற நூலகமாகத் திகழ்கிறது இந்த சரஸ்வதி மஹால் நூலகம்.


16, 17 நூற்றாண்டுகளில் தஞ்சையை ஆண்ட நாயக்க அரசர்கள் சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் நூல்களைப் கொண்டு வந்து சேர்த்தனர். தஞ்சாவூர் மராத்திய அரசர்கள் மேலும் பல நூல்களைச் சேர்த்து நூல்நிலையமாக மாற்ற, ஊக்கத்தோடு செயற்பட்டனர். அதில் தலைசிறந்தவர் இரண்டாம் சரபோஜி மன்னர் ஆவார். இவர் 1820 ஆம் ஆண்டு காசிக்கு சென்றபோது, ஏராளமான சமஸ்கிருத நூல்களை கொண்டு வந்து சேர்த்தார். மேலும், இவர் காலத்தில், மேல்நாட்டு மொழியிலான 5000 அச்சுப்புத்தகங்களும், பல சிறந்த ஓவியங்களும் சேர்க்கப்பட்டன. ஆகையால் தான், இந்நூலகம் சரபோஜி சரசுவதி மகால் நூல்நிலையம் என்று வழங்கப் பெறுகிறது. இந்நூலகத்திற்கு வெளியே கொலுமண்டபமாக இருந்த ஒரு மண்டபத்திலே, 1807-இல் கிழக்கிந்தியக் கம்பெனியாரால் நிறுவப்பெற்ற சரபோஜி மன்னரின் உருவச்சிலை அழகாக அமைந்துள்ளது.


இத்தகைய புகழ்பெற்ற சரஸ்வதி மஹாலில் இருந்து மன்னர் சரபோஜி மற்றும் அவரது மகன் சிவாஜி ஆகியோரின் ஓவியம் காணாமல் போனதாக ராஜேந்திரன் என்பவரிடமிருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது. இது சம்மந்தமாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. காவல்துறை இயக்குநர் டாக்டர் ஜெயந்த் முரளி, காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ரவி ஆகியோர் மேற்பார்வையில், காணாமல் போன ஓவியம் குறித்து விசாரணை நடத்தி அதனை கண்டுபிடிக்க காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்புக் குழுவினர் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் 1786 ஆம் ஆண்டில், தஞ்சாவூர் ராஜா துலாஜா இறந்தபோது, அவரது வளர்ப்பு மகன் சரபோஜி இளமையாக இருந்தார்.  மேலும் அவரது மறுமனையாட்டியான அமர் சின் மூலம் பிறந்த பெற்ற மற்றொரு மகன் ராஜாவாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், 1798ல் ஆங்கிலேயர்கள் பெரும்பாலான இந்திய அதிகார அமைப்புகளைக் கட்டுப்படுத்தினர். தொடர்ந்து சரபோஜியை மன்னராக்க முடிவு செய்தனர். சரபோஜி விரைவில் பல மொழிகளைக் கற்றுக் கொண்டார், மேலும் அவர் தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகத்தை விரிவுபடுத்தினார், அதில் இன்று நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் ஓவியங்கள் உள்ளன. தஞ்சாவூரின் போன்ஸ்லே ராஜாக்களில் கடைசியாக இருந்தவர் சரபோஜி மன்னர்தான்.




 


சரபோஜி 1832 இல் இறந்தார். அவரது ஒரே மகன் சிவாஜி 1855 வரை ஆட்சி செய்தார். இருப்பினும், அவருக்கு ஆண் வாரிசு இல்லை. மன்னர் சரபோஜி மற்றும் அவரது இளமைப் பருவத்தில் இருக்கும் இந்த ஓவியம் 1822 மற்றும் 1827 க்கு இடையில் வரையப்பட்டு சரஸ்வதி மஹாலில் வைக்கப்பட்டுள்ளது. 1918 ஆம் ஆண்டு சரஸ்வதி மஹால் நூலகம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த இந்திராகாந்தி, நூலகத்தின் வளர்ச்சிக்காக நிதியை அனுமதித்த போது, மைக்ரோஃபிலிம் மற்றும் உள்ளடக்கங்களை பட்டியலிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்த போதிலும், மஹாலில் இருந்து ஓவியம் காணாமல் போனதைக் காட்ட எந்தப் பதிவும் இல்லை.


இந்தியாவில் ஓவியத்தை கண்டுபிடிப்பதற்கான சிறப்புக்குழுவின் முயற்சிகள் வெற்றிபெறாததால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் வெளிநாடுகளில் உள்ள பழங்கால சேகரிப்பாளர்களின் அருங்காட்சியகங்கள் மற்றும் இணையதளங்களைச் சரிபார்க்க முடிவு செய்தனர். அவ்வாறு செய்யும்போது, 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவின் Peabody Essex Museum 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியத்தை வாங்கியுள்ளது. ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்திலிருந்து இந்தியாவில் இருந்து திருடப்பட்ட பழங்காலப் பொருட்களைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் 2011 இல் கைது செய்யப்பட்ட கலை பொருட்கள் வியாபாரி சுபாஷ் கபூரிடமிருந்து பொருட்களை வாங்கிய உலகின் பல முக்கிய கலை நிறுவனங்களில் PEM ஒன்றாகும்.




 


ஹோம்லேண்ட் செக்யூரிட்டி இன்வெஸ்டிகேஷன் (HSI) மூலம் PEM ஆனது அதன் சேகரிப்பில் உள்ள 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உள்ள தஞ்சை ஓவியம், 2006 இல் சுபாஷ் கபூரின் நியூயார்க் கேலரியில் இருந்து அவர்கள் பெற்ற ஆதாரத்தை பொய்யாக்கியது என்பதை அறிந்து கொண்டது. 2013 இல் இறந்த இந்திய கலை சேகரிப்பாளரான லியோ ஃபிகிலின் பெயரை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். "1969 இல் ஐரோப்பிய சேகரிப்பிலிருந்து" வெண்கலத்தை வாங்கியதாகக் கூறி கபூருக்கு இந்த பொய்யான கடிதத்தை பிகில் வழங்கினார். PEM, HSI விசாரணையில், இந்த ஓவியம் ஒரு திருடப்பட்ட கலைப்பொருள் என்று அறிந்ததும், ஒரு முடிவு எடுத்து, சரபோஜி ஓவியத்தை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைத்தது. இவை அனைத்தும் தமிழகத்தின் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு குழுவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


முறையான விசாரணையின் மூலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓவியத்தை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. தற்போது ஆவணங்கள் மற்றும் MLAT மூலம் உரிமையை நிரூபிப்பதன் மூலம் மன்னர் சரபோஜியின் ஓவியத்தை சரஸ்வதி மஹாலுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கியுள்ளது. யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் கீழ் அந்த ஓவியத்தை மீட்டு சரஸ்வதி மஹால் நூலகத்தில் விரைவில் ஒப்படைக்க முடியும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நம்புகின்றனர். அந்த ஓவியத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தொடங்கியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தஞ்சையின் புகழை மேலும் உயர்த்திய சரபோஜி மன்னரின் ஓவியத்தை கண்டுபிடித்து அதை மீட்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண