தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே காதலுக்கு துணை போனதாக சென்டிரிங் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் நான்கு மகன்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் அன்பரசியை அதே தெருவைச் சேர்ந்த கார் டிரைவரான கருப்புசாமி என்பவர் காதலித்து வந்துள்ளார்.


இதையறிந்த அன்பழகன் கருப்புசாமியை கண்டித்துள்ளார். இந்நிலையில் அன்பரசி, கருப்புசாமி காதலுக்கு அதே தெருவை பவுன்ராஜ் மகன் சுந்தரபாண்டியன் (36) என்பவர் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அன்பழகன் குடும்பத்தினர் சுந்தரபாண்டியனிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அன்பழகன் மற்றும் பவுன்ராஜ் குடும்பத்தினர் மத்தியில் பிரச்னை இருந்து வந்துள்ளது. 


இதனால், அன்பழகனுக்கும், பவுன்ராஜ் குடும்பத்திற்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2017ம் ஜனவரி 11ம் தேதி இரவு, பவுன்ராஜ் தனது மனைவி தமிழரசி, மகன்கள் சுந்தரபாண்டியன், மருதுபாண்டி,கார்த்தி ஆகியோருடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். 


அப்போது அங்கு வந்த அன்பழகன் அவரது மகன்கள் அன்புநிதி, அறிவுநிதி, அருள்நிதி, அழகுநிதி ஆகியோர் சேர்ந்து, சுந்தரபாண்டியனை கத்தியால் குத்தி தாக்கினார். இதை தடுக்க சென்ற பவுன்ராஜ், கார்த்தி இருவரையும் தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த சுந்தரபாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அன்பழகன் (60) அன்புநிதி (32), அறிவுநிதி (30), அருள்நிதி (28), அழகுநிதி (26) ஆகியோரை நாச்சியார்கோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இவ்வழக்கு கும்பகோணம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி ராதிகா இந்த வழக்கை விசாரித்து அன்பழகன் மற்றும் அவரது மகன்கள் 4 பேர் உட்பட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 13,750 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து அன்பழகன் உட்பட 5 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.


கடந்த 2017ம் ஆண்டு நடந்த இந்த கொலை சம்பவம் அப்போது கும்பகோணம் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டதற்கு, அரசு தரப்பில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளதற்கும் பொதுமக்கள் தரப்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.