தஞ்சை  மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்படி சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நமசிவாயம் அறிவுறுத்தலின் பேரில் வட்டார மருத்துவர் டாக்டர் மு.அகிலன் ஏற்பாட்டின் படி வல்லம் வட்டார மருத்துவ பணியாளர்கள். பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாண சுந்தரம், செயல் அலுவலர் பிரகந்தநாயகி மற்றும் பேரூராட்சி பணியாளர்களுடன் இணைந்து "ஒருங்கிணைந்த காய்ச்சல் தடுப்பு பணிகள்" விரிவாக செயல்படுத்தப்பட்டது.



இதில் வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுமார் 150 பணியாளர்களைக் கொண்டு ஒருங்கிணைந்த காய்ச்சல் தடுப்பு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வீதி .வீதியாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் 24 கிராம சுகாதாரசெவிலியர்கள், மக்களை தேடி மருத்துவ தன் ஆர்வலர்கள் காய்ச்சல் விவரங்களை சேகரித்தினர்.

40 களப்பணியாளர்கள், 30 தூய்மை பணியாளர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வீடுகளிலும் சென்று ஆய்வு செய்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்களை கண்டறிந்து அழித்தனர். தண்ணீர் தேங்கும் கொட்டாங்குச்சி, பிளாஸ்டிக் பெட்டிகள், தண்ணீர் தொட்டிகள், மூடி இல்லாத பாட்டில்கள், டயர்கள் போன்றவற்றை கண்டறிந்து அகற்றினர்.

வீட்டிற்குள் இருக்கும் ஃப்ரிட்ஜ் போன்றவற்றில் கொசு உற்பத்தியாகும் பகுதிகளில் கொசுப்புழுக்கள் கண்டறிந்து சுத்தப்படுத்தினர். பொது மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரை சேமிக்கும் மேல் தொட்டிகள் போன்றவற்றில் குளோரினேஷன் செய்து சுத்தம் செய்து தண்ணீர் பொதுமக்களுக்கு விநியோகம்  செய்யப்பட்டது.

வடக்கு செட்டி தெரு, மூப்பனார் தெரு, அண்ணா நகர்  ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற மருத்துவ முகாமும் நடைபெற்றது.  
மேலும் நிலவேம்பு குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருகளிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து ராட்சச புகை மருந்து அடிப்பான் மூலம் அடிக்கப்பட்டது. வல்லம் பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு அம்மாணவர்களும் காய்ச்சல் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வல்லம் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் பாரதி,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேலு, வல்லம் சமுதாய செவிலியர் ரேணுகா, வல்லம் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேஷ், வல்லம் சுகாதார ஆய்வாளர் அகேஸ்வரன், பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நரேந்திரன் மற்றும் பலரின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் வீடுகளிலும், வீட்டை சுற்றியும் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

படம்: தஞ்சை அருகே வல்லத்தில் ஒருங்கிணைந்த காய்ச்சல் தடுப்பு பணிகள் நடந்தது.