தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ருத்திரசிந்தாமணி அருகே உள்ள பழுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (70), விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக இவருக்கு இடது காலில் ஆறாத புண் இருந்துள்ளது. மேலும், கால் மற்றும் இடுப்பு கீழ் பகுதியில் கடுமையான வலி இருந்துள்ளது. இதையடுத்து, அவர் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள், காயம் ஆறாத நிலையில், உடலில் உள்ள திசுவை (பயாப்ஸி) பரிசோதனைக்கு அனுப்பினர்.


இதில், அவருக்கு வீரியம் மிக்க கரும்புற்று நோய் (MALIGNANT MELANOMA) தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வகை புற்றுநோயானது தோலில் ஏற்படும் புற்றுநோயாகும். மேலும், அரிதான இந்த புற்றுநோய், லட்சம் நபர்களில் 2 பேரை மட்டுமே பாதிக்கும் தன்மை வாய்ந்தது.  தொழிலாளி அருணாச்சலத்திற்கு ஏற்பட்ட புற்றுநோயானது, கீழ்பாதத்தின் தோலில் ஏற்பட்டு, அவரது கால் முழுவதும் பரவி, இடுப்பு  பகுதியில், பெரிய ரத்த நாளங்களை சுற்றி உள்ள அனைத்து நிணநீர் முடிச்சுகள் வரை பரவி, பெரும் வேதனையை அளித்தது.




மிகவும் வறிய நிலையில் இருந்த கூலித் தொழிலாளியான அருணாச்சலம் குடும்பத்தினர் இதனால் துடித்துப் போயினர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பேராவூரணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாஸ்கர், மருத்துவர்கள் பிரசன்ன வெங்கடேசன், தம்பு.சுதாகர் ஆகியோர் கலந்தாலோசனை செய்து, சிக்கலான நிலையில் இருந்த அருணாச்சலத்திற்கு பேராவூரணி அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். 


நடுத்தர தாலுகா அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை அரங்கில் போதிய வசதி இல்லாத நிலையிலும், சவாலாக எடுத்துக் கொண்டு, இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய வேண்டும் என மருத்துவர்களால் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜனவரி 2 ஆம் தேதி அருணாச்சலம், பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு முதற்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு ஜன.5 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.



பேராவூரணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரும், அறுவை சிகிச்சை நிபுணருமான பாஸ்கர், அறுவை சிகிச்சை மருத்துவர் பிரசன்ன வெங்கடேசன், மயக்க மருந்து நிபுணர் தம்பு சுதாகர் மற்றும் புற்றுநோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் மைக்கேல் ராஜீவ், செவிலியர்கள் சித்ரா, விமலா மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சவாலான சிகிச்சையை சுமார் 5 மணி நேரம் போராடி, வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதில் புற்றுநோய் கட்டி முழுமையாக அகற்றப்பட்டது மேலும் அது பரவிய திசுக்கள் நிணநீர் முடிச்சுகள் முழுவதும் அகற்றப்பட்டது. கட்டி அகற்றப்பட்ட காலுக்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் புதிய தோல் பொருத்தப்பட்டுள்ளது.


தஞ்சையில் மருத்துவமனை நடத்தி வரும், பிரபல புற்றுநோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணரான ராஜீவ் மைக்கேல், தனது சக மருத்துவர்களுக்காக நட்பு அடிப்படையில், சேவை மனப்பான்மையுடன், எவ்வித ஊதியமும் பெறாமல் அறுவை சிகிச்சையில் முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் மருத்துவமனையில் பல லட்சங்கள் செலவில் செய்யப்படும் இந்த சிகிச்சை முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செலவில்லாமல் செய்து முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  மேலும், இவ்வகையான அறுவை சிகிச்சை, அனைத்து வசதிகளும் நிறைந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், தமிழகத்திலேயே முதன்முறையாக தாலுகா அளவிலான மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற ஏழைத் தொழிலாளிக்கு அறுவை சிகிச்சை செய்தது தங்களுக்கு மன திருப்தியை தந்ததாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.  இந்நிலையில், தொடர் சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய  அருணாச்சலம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கூலித் தொழிலாளிக்கு, பழங்கள் வழங்கி ஆறுதல் கூறிய பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைப் பாராட்டி மரியாதை செலுத்தினார்