பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து மறுபரிசீலனை செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் 5 விவசாயிகள் நெற்றில் நாமம் இட்டு வந்து தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர். இதனால் விவசாயிகள் கூட்டத்தில் சற்றே சலசலப்பு ஏற்பட்டது.


தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டதில், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பாரபட்சமாக காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டது.


மாவட்டத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டு சம்பா பருவத்துக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை 7 கிராமங்களுக்கு ரூ. 36 லட்சம் மட்டுமே கிடைத்தது. இந்த முரண்பாடு குறித்து காப்பீட்டு நிறுவனமும், புள்ளியல் துறையினரும் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.


தொடர்ந்து, அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் நிறுவன தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் விளக்கம் அளிக்கத் தொடங்கினார். ஆனால், விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியாமல் திணறினார். இதையடுத்து, விவசாயிகளை கலெக்டர் சமாதானப்படுத்தினார்.


பின்னர், புள்ளியல் துறை அலுவலர் பேசுகையில், எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் பயிர் அறுவடை சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஐந்து ஆண்டு கால சராசரி மகசூல் கணக்கிடுவதற்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை எனவும், அப்பணியைக் காப்பீட்டு நிறுவனமே மேற்கொள்ளும் என்றும் விளக்கம் அளித்தார்.


தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் அறுவடை சோதனை ஒளிவுமறைவாக நடத்தப்படுகிறது. எனவே, இத்திட்டம் தொடங்கப்பட்ட காலம் முதல் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். எந்தவொரு காப்பீட்டு நிறுவனத்துக்கும் மாவட்ட அலுவலகம் கிடையாது.


பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: கடந்த ஆண்டு சம்பா பருவத்தின்போது பெய்த பெரு மழை காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டதை தமிழக முதல்வர், அமைச்சர்கள் பார்வையிட்டனர். ஆனால், விவசாயிகள் செலுத்திய பிரிமிய தொகை கூட இந்த மாவட்டத்துக்குக் கிடைக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஏக்கருக்கு ரூ. 5,000 வழங்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.


மதுக்கூர் ஏ.பி. சந்திரன்: திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ. 94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 7 கிராமங்களுக்கு ரூ. 36 லட்சம் மட்டும் பயிர் காப்பீடு வழங்கியிருப்பது வேதனை அளிக்கிறது. பயிர் காப்பீடு தவறாகக் கணக்கிடப்பட்டதால், விவசாயிகள் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாக்கியுள்ளனர். எனவே மறு பரிசீலனை செய்ய வேண்டும்.




தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன்: தமிழக முதல்வர் பார்வையிட்ட மதுக்கூர் வட்டாரத்தில் ஒருவருக்குக் கூட பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. எனவே பிரிமிய தொகையைச் செலுத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்ற நிலைமை உள்ளது.


அன்னப்பன்பேட்டை எம். செல்வராஜ்: கடந்த 2017 -18 ஆம் ஆண்டில் பயிர் சேதம் 62 சதவீதம் எனக் கணக்கிடப்பட்டு, அறிவிக்கப்பட்ட ரூ. 16,000 இழப்பீடு இதுவரை கிடைக்கவில்லை. இவ்வாறு பேசினர்.