தஞ்சை மாவட்டம் வல்லம் வட்டாரம் மருங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த தங்கபுடையான்பட்டி துணை சுகாதார நிலைய ஊராட்சி பகுதியில் "மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தின் கீழ் மாபெரும் தொற்றாநோய்கள் பரிசோதனை முகாம் நடந்தது.



பொது மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் விதமாக தமிழ்நாடு அரசு மக்களைத் தேடி மருத்துவம் என்னும் திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, முடக்குவாதம், பெண்களை கருப்பைவாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் மற்றும் நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு அதற்குரிய மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின் படி மக்களைத் தேடி மருத்துவம் திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆலோசனைப்படி, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் நமசிவாயம் வழிகாட்டுதலின் பேரில் நடந்த முகாமிற்கு தங்கபுடையான்பட்டி ஊராட்சித் தலைவர் கோகிலா சிவகுமார் ஊராட்சி செயலாளர் செந்தில், ஒன்றியக்குழு உறுப்பினர் கவிதா காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


 





வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மு.அகிலன், நடமாடும் மருத்துவக்குழு மருத்துவர் பாரதி, மருங்குளம் மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேஸ்வரன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் தியாகராஜன், சுகாதார ஆய்வாளர்கள் புரவலன், அகீஸ்வரன், மருத்துவ பணியாளர்கள் பவித்ரன், மேகலா, சுகாதார தன்னார்வலர் சிவசங்கரி, சுதா, பிரின்சி, அன்புசெல்வி, பிரேமா, வெற்றிசெல்வி, பிரியதர்ஷினி, சித்ரா, அனிதா, மாலதி, சுகந்தி, மகேஷ்வரி ஆகியோர் அடங்கிய குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளித்தனர்.

இதில் 12 சுகாதார தன்னார்வலர்கள், ஒரு எம்டிஎம் செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், NMS, மருத்துவ அலுவலர்களை கொண்ட நடமாடும் மருத்துவக்குழு ஆகியோரை ஒருங்கிணைத்து அரசு பள்ளியில் முகாமிட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் வீடு, வீடாக சென்று தொற்றா நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் 226 பேருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகள் 6 பேருக்கும், இரத்தக் கொதிப்பு நோயாளிகள் 5 பேருக்கும் "மக்களை தேடி மருத்துவத்தின் கீழ்" மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. மேலும் கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. முகாமில் பரிசோதிக்கப்பட்ட அனைவரும் பதிவு செய்யப்பட்டனர். இந்த மருத்துவ முகாமால் கிராமப்பகுதியை சேர்ந்த மக்கள் வெகுவாக பயனடைந்தனர். மருத்துவமனைக்கு செல்ல இயலாத வயதானவர்களுக்கு இந்த மருத்துவ முகாம் சிறந்த பயனை அளிக்கிறது. இதுபோன்ற தமிழக அரசின் செயல்பாடுகள் கிராம மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்று சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண