தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.



தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காவிரி டெல்டாவில் பல மாவட்டங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் எதிர் நோக்கும் அதிக மழை காரணமாக மாணவர்கள் நலன் கருதி இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.



தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கொள்முதல் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை நனையாமல் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மழை இல்லாத நேரங்களில் நெல்மூட்டைகள் உடனுக்குடன் லாரிகளில் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தின் எதிர்நோக்கும் பலத்த மழைகாரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.


தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த இரு வாரத்திற்கு முன்பு தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் தஞ்சை அருகே வல்லம், கல்விராயன்பேட்டை, ஆலக்குடி உள்பட பல இடங்களில் அறுவடை  பணிகள் பாதிக்கப்பட்டது. நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக சாலைகளில் காய வைக்கப்பட்டு வந்த விவசாயிகளின் நெல் குவியல்கள் மீண்டும் நனைந்தது.