தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்துள்ள மேலவெளி ஊராட்சியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


தஞ்சை பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகர் பகுதியை விட அருகில் உள்ள கிராமங்களில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சென்று மக்களுக்கு வெகுவாக தொல்லையை ஏற்படுத்தி வருகிறது. 


அந்த வகையில்  தஞ்சை அருகே மேலவெளி ஊராட்சியில் உள்ள மகாப் நகர், பாத்திமா நகர் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பு பகுதிக்கு வந்து குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன.


அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து சென்று விடுகின்றன. மேலும் ஓட்டு வீட்டின் மேல் அமர்ந்து ஓடுகளை கீழே தள்ளி விடுகின்றன. இதனால் அடிக்கடி வீட்டை  பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கேபிள் ஒயர்களை பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடும் குட்டிக் குரங்குகளால் எலக்ட்ரானிக் சாதனங்கள் பாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் டேபிளில் வைக்கப்பட்டுள்ள டிவிக்கள் கீழே விழுந்து உடைந்து விடுகின்றன.


அதுமட்டுமின்றி மின்வயர்கள், வெயிலில் காயவைக்கப்பட்ட துணிகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துகின்றன. அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கொண்டு வரும் உணவுகளை பாய்ந்து பிடுங்கி செல்கின்றன. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். வீடுகளுக்குள் ஆள் இல்லாத நேரமாக புகுந்து பருப்புகள், மளிகை பொருட்களை வாரியிறைத்து வீணாக்குகின்றன. மேலும் தேங்காய், காய்கறிகள் போன்றவற்றை இழுத்து சேதப்படுத்துகின்றன. மளிகைகடைகள், பெட்டிக்கடைகளில் அசந்த நேரத்தில் புகுந்து தின்பண்டங்களை எடுத்துக் கொண்டும், கீழே தள்ளியும் குரங்குகள் செய்யும் தொல்லைகள் மக்களை வெகுவாக பாதித்து வருகிறது.


மேலும் சின்ன நாய்க்குட்டிகளை வாலை இழுத்து பிடித்து இழுத்து தரையில் அடிக்கின்றன. இதனால் தெருவில் சுற்றித்திரியும் சின்ன நாய்க்குட்டிகள் சில இறந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒன்றல்ல இரண்டல்ல என்பது போல் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள் ஓட்டல்களில் திடீரென்று புகுந்து வடை, போண்டா போன்ற உணவு பொருட்களை எடுத்துக் கொண்டும் தட்டி விட்டும் செல்வதால் வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.




அட்டகாசம் செய்யும் குரங்குகளால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர். சிறு குழந்தைகள் வீட்டின் வாசலில் நின்றால் திடீரென்று மேலிருந்து குதித்து குழந்தைகளின் உடைகளை பிடித்து இழுக்கின்றன. இதனால் குழந்தைகள் பயந்து அலறி ஓடி கீழே விழுந்து அடிப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.


எனவே மேலவெளி ஊராட்சி மற்றும் வனத்துறையினர் குரங்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குரங்களை பிடித்தால் வனப்பகுதியில் கொண்டு சென்று அவற்றை விட்டு விட்டு வரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், குரங்குகள் அட்டகாசம் அதிகம் என்பது உண்மைதான். ஆனால் சாலை விரிவாக்கம் உட்பட பல்வேறு வளர்ச்சிக்காக புளிய மரம் உட்பட பல்வேறு மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. இதனால் மரங்கள் இல்லாததால் குரங்குகள் நகர் பகுதி மற்றும் கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து அட்டகாசம் செய்கின்றன. பிடிக்கப்படும் குரங்குகளை வனப்பகுதியில் கொண்டு விட்டால் அவை மீண்டும் நகர் பகுதிகளுக்கு வராது என்றனர்.