தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 210 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். இந்த கஞ்சா இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்ட கடலோர பகுதியிலிருந்து இலங்கைகக்கு கஞ்சா கடத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதை கண்காணித்து போலீசார் தடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, கட்டையங்காடு கிராமத்தில் உள்ள காட்டாற்று பாலத்தில் இன்று காலை திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசுக் காரை  போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த காரில் தலா 2 கிலோ எடையுள்ள 105 கஞ்சா பொட்டலங்கள் 7 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து கஞ்சா மூட்டைகளுடன் காரை பறிமுதல் போலீசார் பறிமுதல் செய்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் காரில் வந்த 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஜோதிங்கநல்லூர் சுந்தரம் என்பவரின் மகன் சீனிவாச பெருமாள் (25), திருநெல்வேலி மாவட்டம், திருமலைகொழுந்தபுரம் ஆறுமுகம் என்பவரின் மகன் முத்துமாலை (21) என்பது தெரிய வந்தது.

மேலும் போலீசார் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த பாலா என்ற நபர் கொடுத்த இந்த மூட்டைகளை கொண்டு வந்துள்ளனர். இந்த மூட்டைகளை கட்டையங்காடு பகுதியில் வந்து ஒருவர் பெற்றுக் கொள்வார். ஆனால் போலீசாரின் வாகனச் சோதனையில் தாங்கள் சிக்கிக் கொண்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த கஞ்சா மூட்டைகள் சென்னையில் இருந்து திருச்சி - புதுக்கோட்டை வழியாக பட்டுக்கோட்டை பகுதிக்கு கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது. கஞ்சா மூட்டைகளை இங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தஞ்சாவூர் எஸ்.பி ராஜாராம் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் திருச்சிற்றம்பலம் வந்து கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பின்னர் திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்த சீனிவாசபெருமாள், முத்துமாலை இருவரையும் கைது செய்தனர். மேலும் காரும், கஞ்சா மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சிகள் நடந்து வருகிறது. போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு இதை தடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.