தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் பைபாஸில் பழ வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேரை வல்லம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


பழக்கடை நடத்தி வந்த வாலிபர்


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அப்பு என்கிற ஹரிஹரன் (26). இவர் நீடாமங்கலத்தில் பழக்கடை நடத்தி வந்தார். கடந்த 28ம் தேதி இரவு நீடாமங்கலத்தில் இருந்து வினோத், ராஜமுருகன் ஆகியோருடன் லோடு ஆட்டோவில் பழங்கள் வாஙகுவதற்காக திருச்சிக்கு புறப்பட்டார்.


வழிமறித்து அரிவாளால் வெட்டினர்


லோடு ஆட்டோவை வினோத் ஓட்டி வந்தார். தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு கார் ஷோரூம் எதிரே லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு 11 மணிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்போது பின்னால் வேகமாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 2 பேர் லோடு ஆட்டோவை மறித்து டிரைவர் வினோத் முகத்தில் மண்ணை வீசி அரிவாளால் வெட்டி உள்ளனர்.


கொலையாளிகளின் ஆவேசம்


இதனால் நிலைகுலைந்து போன வினோத் உடன் லோடு ஆட்டோவை நிறுத்தி விட்டார். தொடர்ந்து அந்த மர்மநபர்கள் அப்புவை சுற்றி நின்று அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அப்பு அலறி துடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தில் வினோத் படுகாயமடைந்தார். ராஜமுருகன் காயமின்றி தப்பினார். இதற்கிடையில் ராஜமுருகன் உதவி கேட்டு கத்தி உள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்ட வர தொடங்கி உள்ளனர். இதனால் அப்புவை வெட்டிய மர்மநபர்கள் தாங்கள் வந்த பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.


பின்னர் இந்த சம்பவம் குறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடன் வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த வினோத்தை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்


பின்னர் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட அப்புவுக்கும், வேறு சிலருக்கும் இடையே தொழில் போட்டி இருந்தது தெரிய வந்தது. மேலும் அப்பு கடையில் வியாபாரம் பழ வியாபாரம் நன்றாக நடந்துள்ளது. ஆனால் அவரது போட்டியாளர்கள் கடையில் வியாபாரம் சரிவர நடக்கவில்லையாம். இந்த தொழில் போட்டிதான் இந்த கொலைக்கு காரணம் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. 


இதையடுத்து கூலிப்படையை ஏவி அப்புவை தீர்த்து கட்டி உள்ளனர். இந்த விபரங்களை சேகரித்த போலீசார் கொலையில் தொடர்புடைய நீடாமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சேர்ந்த ஸ்ரீராம் (21), வலங்கைமான் நார்த்தாங்குடி ராஜேந்திரன் என்பவரின் மகன் அரவிந்த் (27)  மணிகண்டன் மற்!றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.