தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 4,17,999 குடும்பத் தலைவிகள் பயன்பெற்றுள்ளனர் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


தஞ்சையில் நிறைந்தது மனம் நிகழ்ச்சி


தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளிடம் உரிமைத் தொகையின் பயன்களை பற்றி கேட்டறிந்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர்  ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பெண்களின் முன்னேற்றத்திற்காக அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். அரசு பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் இல்லா பயணம், கல்லூரி மாணவியருக்கு உயர்கல்விக்கு ஊக்கமளித்திட மாதந்தோறும் ரூ.1000 போன்ற சிறப்பான திட்டங்களின் வரிசையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மகத்தான திட்டமாக மகளிர் குலம் போற்றுகிறது.


1 கோடியே 15 இலட்சம் குடும்பத் தலைவிகள் பயன்


தமிழ்நாடு முதலமைச்சர்  மக்கள் நலன்காக்கும் மகத்தான திட்டங்களின் வரிசையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் சிறப்பான திட்டமாகும் என்றால் அது மிகையல்ல. தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் இந்தத்திட்டத்தின் மூலம் நாளது வரையில் 1 கோடியே 15 இலட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர்.


மகளிர் உரிமை திட்டத்தில் 4,17,999 குடும்பத் தலைவிகள் பயன்


இத்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:  தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் வட்டத்தைச் சேர்ந்த 22,660 குடும்பத் தலைவிகள், கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த 69,549 குடும்பத் தலைவிகள், ஒரத்தநாடு வட்டத்தைச்சேர்ந்த 47,376 குடும்பத் தலைவிகள், பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த 52,282 குடும்பத் தலைவிகள், பட்டுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 75,896 குடும்பத் தலைவிகள், பேராவூரணி வட்டத்தைச் சேர்ந்த 24,505 குடும்பத் தலைவிகள், தஞ்சாவூர் வட்டத்தைச் சேர்ந்த 59,735 குடும்பத் தலைவிகள் பயன் அடைந்துள்ளனர்.


இதேபோல் திருவையாறு வட்டத்தைச் சேர்ந்த 22,470 குடும்பத் தலைவிகள், திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த 43,526 குடும்பத் தலைவிகள் என மொத்தம் இத்திட்டத்தின் வாயிலாக 4,17,999 குடும்பத் தலைவிகள் பயன்பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.


தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்


திட்டத்தின் பயன் குறித்து பயனாளிகள் தெரிவித்ததாவது: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் மாதந்தோறும் ரூ.1000 வழங்குகிற மகத்தான திட்டம் தந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜத்திடம் பேராவூரணி வட்டம் கொன்றைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜபிரியா, மிதியக் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராணி ஆகியோர் தெரிவித்தனர்.


அன்றாடம் கூலி வேலை செய்து வருகிற எங்களைப் போன்ற எளியவர்களின் வாழ்க்கையில் மாதந்தோறும் ரூ 1000 வழங்குவது தமிழக அரசின் சிறந்த திட்டமாகும். இந்த நல்ல திட்டத்தை தந்துள்ள  முதலமைச்சருக்கு ரொம்பவும் நன்றி என மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர். இவ்வாறு கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.