தஞ்சாவூர்: தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் 2ம் தேதி வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். இதை ஒட்டி தஞ்சை கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கின. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

வேலை நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் . வரும் 6ம் தேதி வரை மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இன்று மகாவீரர் ஜெயந்தி, 1ம் தேதி வங்கி விடுமுறை, 3ம் தேதி புனித வெள்ளி, 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என நான்கு அரசு விடுமுறை தினங்களை தவிர்த்து மற்ற 4 நாட்களில் வரையறுக்கப்பட்ட நேரங்களில் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Continues below advertisement

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணத்தில் கோட்டாட்சியர் வருவாய் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், ஒரத்தநாடு, திருவையாறு, திருவிடைமருதூர், பேராவூரணி, பாபநாசம் ஆகிய இடங்களில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இதனை முன்னிட்டு கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்கு முன்பாக வேட்பாளரின் ஆதாரவாளர்கள் நிறுத்தப்பட்டனர். வாகனங்களும் அங்கேயே நிறுத்தப்பட்டன. வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர் .

மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த அலுவலகங்களில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் நேற்று மனுதாக்கல் செய்தனர். இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் மீண்டும் 2ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்யப்படும். மனுதாக்கல் தொடங்கியதை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.