நாகையில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து அதில் வரும் பணப்பலனை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளார். 

 

தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை மிக அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த மாதம் பத்தாம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. முழு ஊரடங்கு போது பொதுமக்கள் தேவை இன்றி யாரும் வெளியில் வர வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடமாடும் காய்கறி கடைகள் மற்றும் மளிகை பொருட்கள் வீட்டிற்கு வந்து வழங்கப்படும் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்து அந்தத் திட்டமும் தற்போது நடைமுறையில் உள்ளது.

 

இந்நிலையில் தமிழகத்தின் நிதி நிலைமையை போக்கும் வகையில் முதல்வர் நிவாரண நிதி யார் வேண்டுமானாலும் வழங்கலாம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார் அதனையொட்டி பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் அதுமட்டுமின்றி பள்ளி மாணவ மாணவிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த சிறு தொகையை கூட முதல்வர் நிவாரண நிதிக்கு நாள்தோறும் அனுப்பி வைத்து வருகின்றனர்



அதன்படி நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தனது அரசு பணியை ராஜினாமா செய்து அதில் வரும் பணப்பலனை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளார். நாகை அடுத்துள்ள தெத்திசமரசம் நகரில் வசித்து வருபவர் புத்தநேசன். இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள நெடுங்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

 

இந்த நிலையில் கொரோனா அவலங்களையும், மக்கள் அல்லல்படும் நிலையையும்,  உயிரிழப்புகளையும் தொலைக்காட்சிகளில் தனது குடும்பத்தோடு பார்த்த ஆசிரியர் புத்தநேசன் தனது அரசு பணியை ராஜினாமா செய்து அதில் வரும் பிடித்த தொகைகளை முதல்வருக்கு கொரோனா நிவாரண நிதியாக வழங்க முடிவெடுத்துள்ளார். அதனை தொடர்ந்து தனது குடும்பத்தோடு நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரை சந்தித்த அவர், ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கல்வித்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களுக்கு வாழ்த்து கூறினார். 



மக்கள்படும் இன்னல்களை கண்டு தனது மனைவி கோமதி, மகள் சுவாதியா ஆகியோரின் சம்மதத்தோடும், அரசுக்கு தாங்களும் எதாவது செய்யவேண்டும் எனவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அரசு எனது ராஜினாமா கடிதத்தை ஏற்று பிடித்த தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடற்கல்வி ஆசிரியர் புத்தநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில் நாகையில் உடற்கல்வி ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்து உதவ முன் வந்து இருப்பது அனைத்து ஆசிரியர்கள் மத்தியிலும்  பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.