தஞ்சாவூர்: மூன்றடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலரும்,  மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தின் பண்பாட்டுப் பதிவுகளைத் தாங்கி நிற்கும் அடையாளங்களில் ஒன்று தஞ்சாவூர். சமையல் தொடங்கி, இயல், இசை, நாடகம் என முத்திரைப் பதித்த மண் இது. கலைகள் செழித்தோங்கி வளர்ந்த தஞ்சை தமிழகத்தின் செழுமையான கலாச்சாரத்தைத் தாங்கி நிற்கிறது. பிற்கால சோழர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சை ராஜராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் தந்த பூமி. இங்கு நிரம்பி இருக்கும் கோயில்கள் தமிழர்களின் கட்டிடக் கலைக்குச் சான்றாக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.


தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சை, திருவையாறு,ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம்பெற்றுள்ளது. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கான 2024 மக்ககளவை பொதுத்தேர்தல் கடந்த 19ம் தேதி அன்று முடிவடைந்துள்ள நிலையில் பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.




மூன்றடுக்கு பாதுகாப்பு


மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர்


முதல் அடுக்கு பாதுகாப்பில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் ஆயுதம் ஏந்திய நிலையில் சுழற்சி முறையில் உள்ளனர். இதேபோல், இரண்டாவது அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள் ஆயுதம் ஏந்திய நிலையில் சுழற்சி முறை பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். மேலும் மூன்றாவது அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு மாநில காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.


கண்காணிப்பு கேமராக்கள்


இது தவிர வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் கல்லூரி வளாகம் முழுமையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு பணிகளை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சார்பில் முகவர்கள் கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும், தீ தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டும், 24 மணிநேர தீயணைப்பு வண்டிகள் மற்றும் வீரர்கள் தயார் நிலையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.


தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை


வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகம் முழுமைக்கும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்ட வீடியோ கேமராக்கள் மற்றும் ஆளில்லா விமானம் போன்றவை பறக்கவிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.