மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் அது கடந்த சில நாட்களாக படிப்படியாக குறையத் தொடங்கி தற்போது தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக பதிவாகியதுடன், இன்று கொரோனாவால் இருவர் உயிரிழந்த நிலையில் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 177 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 19 ஆயிரத்து 632 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் புதிதாக 44 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 53 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். 

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிக்காக மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர், உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 290  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 35 ஆயிரத்து 615 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.