தஞ்சாவூர்: நம் நாட்டில் வலுவான தலைமை இருப்பதால் வருங்காலத்தில் இந்தியா மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக முன்னேறும் என்று தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.


சாஸ்த்ரா விஷன் 2035 திட்ட தொடக்க விழா


தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சாஸ்த்ரா விஷன் 2035 திட்டத் தொடக்க விழா, ரூ. 60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க வசதிக்கான அனுசந்தன் கேந்த்ரா 3 மற்றும் 4 ம் வளாகத் திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:


இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கை


கொரோனா பரவல் காலத்தில் 150 நாடுகளுக்கு இந்தியா தனது தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொடுத்தது. நம் நாடு ஜி 20 மாநாட்டில் தலைமையேற்று, ஆப்பிரிக்காவை சேர்த்துக் கொண்டபோது, இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கை வெளிப்பட்டது. அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவ உலகை நீடிக்கச் செய்ய வேண்டும் என்பதே இந்தியாவின் பார்வை.


இந்தியா 2047 ஆம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ச்சியை எட்டுவதே நமது தேசத்தின் பார்வை. அதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவாக வேண்டும். அதே சமயம் நம்முடைய விழுமியங்களை வலுப்படுத்துவதை மறந்துவிடக் கூடாது.


போர்ச்சூழல் நிலவும் நிலையில் இந்தியா அமைதியின் பக்கம்


உலக அளவில் போர்ச்சூழல் நிலவும் நிலையில், இந்தியா அமைதியின் பக்கம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. நாடுகளுக்குகிடையே மோதல்கள் நிலவும்போது, அதற்கு தீர்வு ஏற்படுத்துவதற்கு இந்தியாவை உலகம் உற்று நோக்குகிறது. இந்தியாவால் உதவி செய்ய முடியும் என உலகம் நம்புகிறது. ரஷ்யா - உக்ரைன் போரின்போது குடிமக்கள் வெளியேறும் வரை போரை நிறுத்துமாறு இந்தியா கேட்டுக் கொண்டபோது, இரு நாடுகளும் அதை ஏற்று செயல்படுத்தின.


3வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும்


உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் பட்டியலில் 11 ஆவது இடத்திலிருந்த இந்தியா தற்போது 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வருங்காலத்தில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும். நம் நாட்டில் வலுவான தலைமை இருப்பதால், அது சாத்தியமாகும். தங்களது திறன் மற்றும் நற்குணத்தின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். நம் நாட்டில் கடந்த காலத்தில் 20 மில்லியனாக இருந்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது நூறு மில்லியனாக உயர்ந்துள்ளது. இவ்வாறு இந்தியாவின் முன்னேற்ம் அமைந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் விதைகளாக ஊன்றி வலுவான ஆலமரம் போல் நாட்டின் முன்னேற்றத்திற்கு தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.


முன்னதாக, சாஸ்த்ரா பல்கலைக்கழகமும், கெய்னஸ் டெக்னாலஜி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதில், சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். வைத்தியசுப்பிரமணியமும், கெய்னஸ் டெக்னாலஜி நிறுவன முழு நேர இயக்குநர் ஜெயராம் சம்பத்தும் கையெழுத்திட்டனர்.


நிகழ்ச்சியில் சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தர் ஆர். சேதுராமன், முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.