தஞ்சாவூர்: மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி வரும் 17ம் தேதி டெல்டா மாவட்ட தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.  


இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


அரசு அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம்


இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது  ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது .


காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆண்டு காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர், இந்த ஆண்டு தரவேண்டிய தண்ணீரை உடனடியாக தர உத்தரவிட்டும் தற்போது வரை கர்நாடக அரசு வழங்காதது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு தண்ணீர் பெற்று தர வேண்டும்.


மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு


மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதிலேயே கர்நாடக அரசு குறியாக உள்ளது. உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17ம் தேதி டெல்டா மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்


மேலும் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆழ்துளை மூலம் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான இடுபொருள், உரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் . 


குறுவை தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும்


தமிழக அரசு குறுவை சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் குறுவை தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். சாகுபடி செய்யக்கூடிய முழு பரப்பளவிற்கும் திட்டம் சென்றடையும் வகையில் வழங்க வேண்டும்.  தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


டெல்டா மாவட்டங்களில் பாசனம்


தமிழகத்தில் மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உட்பட 15 காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனம் நடைபெறுகிறது.


காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஏற்ற வகையில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஒரு சில ஆண்டுகளில் பருவமழை தாமதம் மற்றும் வறட்சி காரணமாக மேட்டூர் அணை திறக்கப்படுவது தாமதமாகும். மேட்டூர் அணை திறப்பு தாமதம் ஆனால் குறுவை சாகுபடி பரப்பளவு குறையும். ஒரு போக சம்பா சாகுபடியில் விவசாயிகள் இறங்குவர். இந்தாண்டு மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


மேலும் பருவமழை சரியான அளவு பெய்தால் ஒரு போக சம்பா விளைச்சல் நன்கு இருக்கும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.