காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், இரவில் பரவலாக பலத்த மழை பெய்து வருவால், ஈரப்பதம் அதிகமாகி நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் வேதனையடைந்துள்ளனர். காவிரி  டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் இந்தாண்டு இலக்கினை விட அதிகமாக 4.31 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால், டெல்டா மாவட்டங்களில் 550க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.


தனியார் வியாபாரிகளை காட்டிலும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதலாக நல்ல விலை கிடைப்பதால், காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை எனக் கருதி விவசாயிகள் நெல் மணிகளை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக  கொள்முதல் நிலையங்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நெல்லை குவியல் குவியலாக மலை போல் கொட்டி விற்பனை செய்ய வாரக்கணக்கில் காத்திருக்கின்றனர். நெல்லில் 17 சதவீதத்துக்கு குறைவாக ஈரப்பதம் இருந்தால் மட்டுமே கொள்முதலை பணியாளர்கள் செய்கின்றனர். ஆனால் டெல்டா மாவட்டங்களில் இரவில் மழை பெய்வதும், பகலில் வெயில் அடிப்பதுமாக இருக்கிறது. இதனால் விவசாயிகள் பகலில் நெல்லை உலர்த்தி காயவைத்தால், இரவில் மழை பெய்து ஈரப்பதத்தை கூட்டிவிடுகிறது. இதனால் கொள்முதல் நிலையங்கள் திறந்திருந்தும் நெல்லை விற்பனை செய்யமுடியாமல் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களிலேயே இரவு-பகலாக காத்திருக்கின்றனர். இதே போல் ஒரத்தநாடு, பாப்பாநாடு, பருத்திக்கோட்டை, வஸ்தாச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்த நெல் மணிகளை சாலையின் ஒரத்தில் கொட்டி  வைத்துள்ளனர். பகலில் அடிக்கும் வெயிலில் உலர்த்துவதற்காக நெல் மணிகளை காயவைத்தாலும் இரவு நேரங்களில் மழை பெய்வதால், என்ன செய்வதென்று வழிதெரியாமல் நிர்கதியாக நிற்கின்றனர். இதுகுறித்து  தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில்:


குறுவையில் மகசூல் அதிகமாக கிடைக்கும் என்பதால் விவசாயிகள் அதிகளவில் பயிரிட ஆர்வம்  காட்டுகின்றனர். குறுவை அறுவடை காலம் எப்போதும் மழைக்காலத்தில் தான் நடைபெறும், அறுவடை செய்யப்பட்ட நெல்களில் ஈரப்பதம் அதிகமாக காணப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது 17 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல்  நிலையங்கள் திறந்து இருந்தாலும், ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், நெல் கொள்முதல் பணி என்பது பெயரளவுக்கு நடைபெறுகிறது. பகலில் நெல்லை வெயிலில் உலர்த்தினாலும், இரவில் மழையும், பனியும் பெய்து ஈரப்பதத்தின் அளவை கூட்டிவிடுவதால் விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.




தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும்பாலான கொள் முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வது கிடையாது. இது குறித்து அலுவலர்களிடம் கேட்டால், நெல்லில் ஈரப்பதம் இருப்பதால், அதனை கொள்முதல் செய்து வைத்தால், அதிகாரிகள் சோதனையிட்டால், நெல்லில் ஈரப்பதம் இருந்தால், எங்களுக்கு தண்டனை விதிப்பார்கள். மேலும் ஈரப்பதம் இருக்கும் போது நெல் மூட்டைகள் இருந்த எடையை விட, நெல் மணிகள் உலர்தால், எடை குறையும் அதற்கும் நாங்கள் தான், எடை குறைந்தற்கான தொகையை வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கொள் முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய உத்தரவிடவேண்டும். தவறும் பட்சத்தில் தொடர் மழையினால் அனைத்து நெல் மணிகளும் பதறாகி விடும் என்றார்.


இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில்: 17 சதவீதத்துக்கும் குறைவாக ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளாதால் அதன்படி கொள்முதல் செய்யப்படுகிறது.  கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ள நெல்லை ஒரு நாளைக்கு இரண்டு முறை ஈரப்பதத்தின் அளவை பரிசோதனை செய்து, அதில்  ஈரப்பதம் குறைந்த பின்னர் அந்த நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஈரப்பதம் கூடுவதால், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் நாளொன்றுக்கு சராசரியாக 600 மூட்டைகள் தான் கொள்முதல் செய்யப்படுகிறது. மழை இல்லாமல் இருந்தால் மட்டுமே கொள்முதல் பணி தீவிரமடையும் என்றனர்.