நாகை மாவட்டம், நாகூர் அமிர்தா நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்ரமணியன் என்பவரின் மகள் சுபாஷிணி. இவர் நாகை அடுத்துள்ள பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் பருவ கட்டணம் செலுத்தாமல் இருந்த மாணவி சுபாஷினியை கல்லூரி வகுப்பாசிரியர் வகுப்பின் வெளியே நிற்க வைத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுபாஷிணி நேற்று தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 



 

இதனால் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவருடைய உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கல்லூரியில் படிக்கும் சக மாணவிகள் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கல்லூரி மாணவி உயிரிழப்புக்கு காரணமான சர் ஐசக் நியூட்டன் கல்லூரியின் தாளாளர் ஆனந்த், கல்லூரி முதல்வர் லட்சுமிகாந்தன், பிசியோதெரபி வகுப்பாசிரியர் ஜென்சி உள்ளிட்ட மூவர் மீதும் நாகூர் போலிசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கல்லூரி தாளாளர் உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி பாப்பாக்கோவில் பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து நாகை டிஎஸ்பி சரவணன், தலைமையில் போலிசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். மாணவ மாணவிகளின் சாலை மறியல் போராட்டம் காரணமாக வேளாங்கண்ணி - நாகை கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல உயிரிழந்த கல்லூரி மாணவியின் உறவினர்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட கல்லூரியின் தாளாளர் முதல்வர் உள்ளிட்டோரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கோஷங்களை எழுப்பினர். இதனிடையே கல்லூரி முன்பு திரண்ட மாணவர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரியின் நுழைவு வாயில் கதவை மூடிய போலிசார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி முன்பு வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டு போலிசார் குவிக்கப்பட்டு இருப்பதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்து உடைத்து சென்றுள்ளனர்.