மயிலாடுதுறையில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் இவ்வாதீனத்தின் குருமுதல்வரின் குருபூஜை தினத்தன்று தருமபுரம் ஆதீனகர்த்தர் பட்டினப் பிரவேசம் மேற்கொள்வார். ஆதீனகர்த்தரை சொக்கநாத பெருமானாக பாவித்து பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கிச் செல்வது வழக்கம். பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் பொதுமக்கள் வீடுகளில் விளக்கேற்றி பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து வணங்கி வழிபாடு மேற்கொள்வர். பின்னர் ஆதீனகர்தர் கொலுபீடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். இந்த பாரம்பரிய ஆன்மீக மரபுகள் பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. 




இந்நிலையில், தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் நடைபெறவுள்ள ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை  (ஆதீனகர்த்தரை) பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் தூக்கி செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அறிக்கையில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை தடை செய்திட கேட்டுகொண்டதன் பேரில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23-இன்படி சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதாலும் பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீனகர்த்தரை  பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.




இந்த உத்தரவிற்கு மதுரை ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம், உள்ளிட்ட பல்வேறு ஆதீனகர்த்தர்கள் மற்றும் ஆன்மீக  பேரவைகளை கண்டனம் தெரிவித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அப்பகுதி கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை தருமபுர ஆதீன நுழைவு வாயில்  முன்பு  அகில இந்திய முக்குலத்தோர் பாசறையினர் தூக்கு கயிற்றை தலையில் மாட்டிக்கொண்டு நூதன முறையில் தடை உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




மாவட்ட இளைஞரணி செயலாளர் கில்லி பிரகாஷ், நகர செயலாளர் முத்து முரளி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தூக்குக் கயிற்றை கழுத்தில் மாற்றி 500 ஆண்டுகளாக நடைபெறும் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதித்ததை திரும்பப் பெற வலியுறுத்தியும், திரும்பப் பெறவில்லை என்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வோம் என்பதை வலியுறுத்தி கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.