கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு மேல்நடவடிக்கைக்காக நாகை வனச்சரக  அலுவலகத்தில் வைத்திருந்த 400 கிலோ கடல் அதிகாரிகள் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல்வாழ் உயிரினங்களில் அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி கடல் அட்டை உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வகை உயிரினம் வெளிநாடுகளில் மருந்து பொருளாக பயன்படுத்துவதால் கடல் அட்டைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக நாகை கடலோர காவல் குழுமபோலீசாருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ரகசிய தகவல் வந்தது.



 

அதனை தொடர்ந்து நாகை அக்கரைப்பேட்டை மாரியம்மன் கோயிலுக்கு தென்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் 20 லட்சம் மதிப்பில் 812 கிலோ கடல் அட்டை, சுறாமீன் இறக்கைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் கடல் அட்டைகளை பறிமுதல் செய்து நாகை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முருகானந்தம்(51) உள்ளிட்டோரை கைது செய்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட கடல் அட்டைகள் மேல் நடவடிக்கைகாக நாகை மகாலெட்சுமி நகரில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த கடல் அட்டைகளை நேற்று உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர்.



 

அப்போது 400 கிலோ கடல் அட்டைகளை காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து நாகை வனச்சரக அலுவலர் அனந்தீஸ்வரன் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வனச்சரக அலுவலகத்தில் வைத்திருந்த கடல் அட்டைகளை திருடிச்சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அதே அலுவலகத்தில் பணிபுரிந்து தலைமறைவாக உள்ள தற்காலிக  ஊழியர் கோவிந்தராஜை வெளிப்பாளையம் போலிசார் தேடி வருகின்றனர். நாகையில் வனத்துறை அலுவலகத்திலேயே கடல் அட்டைகள் திருடப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.