தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் "வேர்களைத் தேடி" திட்டத்தின் கீழ் 14 நாடுகளை சேர்ந்த 99 அயலகத் தமிழ் இளைஞர்கள் தமிழ் பண்பாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர்  கடந்த 01.08.2025 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் "வேர்களைத் தேடி" திட்டத்தின் கீழ், 14 நாடுகளைச் சேர்ந்த 99 அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு. 01.08.2025 அன்று முதல் 15.08.2025 வரையிலான தமிழக பண்பாட்டுப் பயணத்திற்கான பயண குறிப்புகள், புத்தகங்கள், அடையாள அட்டை மற்றும் உடைகள் போன்ற பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் "மரபின் வேர்களோடு" உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணமும், தமிழ் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து, தமிழின் தொன்மை, தமிழர்களின் வாழ்வியல், கலாச்சாரம், கட்டடம், சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு. தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் போன்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டமான வேர்களைத் தேடி" என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்  24.05.2023 அன்று சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்படி, அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்து, தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுவர்.

அதன் அடிப்படையில், இந்த பண்பாட்டு பயணம் அயலகத் தமிழர் நலத்துறையினால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 17 நாடுகளைச் சேர்ந்த 194 தமிழ் இளைஞர்களைக் கொண்ட மூன்று கட்ட பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், சரஸ்வதி மஹால், தமிழ்ப் பல்கலை கழகம், பிரகதீஸ்வரர் கோயில், கல்லணை போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் நடப்பு ஆண்டில் நான்காம் கட்ட பயணமாக, பிஜி, ரீயூனியன், மார்டினிக், குவாடலூப், இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, மியான்மர், மொரிஷியஸ், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய 14 நாடுகளைச் சேர்ந்த 99 அயலகத் தமிழ் இளைஞர்கள் பங்குப் பெற்றனர்.

இப்பயணத்தில் பங்குபெறும் அயலகத் தமிழ் இளைஞர்கள் அவர்களது நாட்டில் தமிழ்நாட்டின் கலாச்சார தூதுவர்களாக செயல்பட்டு தமிழர்களின் கலாச்சார பெருமைகளை அவர்களது நாடுகளில் பரப்புவர் என தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.