திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் மாவட்டம் முழுவதும் 70 சதவிகிதம் அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக நாள்தோறும் காத்திருக்கும் சூழல் உருவாகாமல் இருக்க மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கொள்முதல் நிலையங்களில் உடனடியாக திறக்க வேண்டும் என நாள்தோறும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் நெல் மணிகளில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் 22 சதவிகிதம் ஈரப்பதம் உள்ள நெல் மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.



 

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவம்  2021-22 ஆம் ஆண்டு 265 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைபெற்றுவருகிறது என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை நடப்பு காரீப் பருவத்தில் சன்னரகம் 450 மெட்ரிக் டன்களும், பொது ரகம் 577 மெட்ரிக் டன்களும் ஆக கூடுதலாக 1030 மெட்ரிக் டன்கள் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தினசரி சுமார் 1000 மெட்ரிக் டன் வீதம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பழைய முறையிலும், தற்பொழுது மின்னணு முறையிலும் பதிவு செய்து நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம். 



 

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தினசரி 1000 நெல் மூட்டைகள் வீதம் கொள்முதல் செய்ய கொள்முதல் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாகவும், உடனுக்குடன் நகர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை மழையில் நனையாதவாறு தார்பாய்கள் கொண்டு பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படுகிறது. அன்றாடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தினசரி இயக்கம் செய்யப்பட்டு கிடங்குகளில் பாதுகாப்பாக சேமிக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள குறுவை பயிர்களுக்கு இழப்பு ஏற்படா வண்ணம் தற்பொழுது பெய்து வரும் மழைநீர் வடித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லினை பாதுகாக்கும் பொருட்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 1282 தார் பாலித்தீன்கள் 50 சதவிகிதம் மானியத்தில்  வழங்கப்படவுள்ளன.  இந்த வார இறுதிக்குள் தார் பாலித்தீன்கள் விவசாயிகளுக்கு வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.