இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. அதேபோல, ரயில்வே பணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்று 'அம்ரித் பாரத்’ திட்டம்.  இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த 508 ரயில்நிலையங்கள்  புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவு பெற உள்ளது. 




பிரதமர் நிகழ்ச்சி:


இதற்காக பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 6) அடிக்கல் நாட்டி துவக்கிவைத்துள்ளார். டெல்லியில் இருந்தப்படியே காணொலி மூலம் ரயில் நிலையங்களை  மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். 25,000 கோடி ரூபாய் செலவில் 508 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளது.  இந்த 508 ரயில் நிலையங்கள் இன்று பணிகள் தொடங்கப்பட்டு, 2025-ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த பணியின்போது, ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், பயணிகள் காத்திருக்கும் அறைகள், கூடுதல் நடைமேடைகள், லிப்ட் வசதி, வாகன நிறுத்த வசதி, கேமரா பொருத்துதல், நுழைவு வாயில் சீரமைப்பு போன்ற பணிகள் நடைபெற உள்ளது.




இந்த 'அம்ரித் பாரத்' திட்டம் மூலம் உத்தர பிரதேசத்தில் 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்திய பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத், தெலங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, ஆந்திராவில் 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13  ஆகியவை புனரமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளன. அதன்படி, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில், ஜோலார்பேட்டை ஆகிய 18 ரயில் நிலையங்கள் 381 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளன.




இந்நிலையில், அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரயில் நிலையங்களை மறு வடிவமைப்பு செய்யும் பணிக்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தொடக்க விழாவில் நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மயிலாடுதுறை ரயில் நிலையம் மறு வடிவமைப்பு செய்யப்பட உள்ளது. இதற்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில் மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார், பாஜக நிர்வாகிகள் மற்றும் ரயில்வே நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். 




சலசலப்பு:


இந்த சூழலில் இவ்விழாவில் பேசுவதற்கு பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரத்தை பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி இதைக் கண்டித்து விழா மேடையின் முன்பு பாஜக நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு பாஜக மாவட்ட தலைவரை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கூச்சலிட்டனர். இதனால் விழா மேடையில் சலசலப்பு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.


இதைத்தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்து வைத்த ரயில்வே அதிகாரிகள், பாஜக மாவட்ட தலைவர் பேசுவார் என அறிவித்தனர். இதனால் பாஜக நிர்வாகிகள், பாரத் மாதா கி ஜே என வெற்றி முழக்கங்களை எழுப்பியவாறு தங்கள் இருக்கையில் அமர்ந்தனர். இதை தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மேடையில் சிறிது நேரம் பேசினார்.


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற