வீடு கிடைக்குமா என்ற அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கும் தியாகராஜபுர மக்கள்.


தமிழ்நாட்டிற்கென ஒரு மத்திய பல்கலைக்கழகம் அதுவும் மிகவும் பின் தங்கிய தமிழ்நாட்டின் கடைக்கோடி கடைமடை பாசனப் பகுதியான திருவாரூரில் இப்பல்கலைக்கழகம் அமைகிறது என்று இம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதி மக்களும் பெரு மகிழ்ச்சியடைந்தனர். இந்த நேரத்தில்தான் மத்திய பல்கலைக்கழகத்திற்கு நிலம் எடுத்து தரவேண்டிய பெரும் பொறுப்பு தமிழ்நாடு அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இருந்ததால் பெருமளவில் நிலத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நிலத்தை கையகப்படுத்த தீவிர முயற்சியில் இறங்கினர் பெரும்புகளுர், ஊராட்சியில் நிலமெடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது.


திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் இரண்டு மாவட்ட எல்லைகள் தொட்டுக் கொள்ளும் இடத்தில் திருவாரூர் மற்றும் நன்னிலம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட சுமார் 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. நிலமெடுப்பதில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்த சூழ்நிலையில் அப்போதைய மாவட்ட நிர்வாகம் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு பட்டாவுடன் கூடிய இலவச வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் அவர்களின் குழந்தைகளுக்கு கல்விக் கடன், புதிதாக தொழில் தொடங்க வங்கிக்கடன் என பல்வேறு வாக்குறுதிகள் அளிககப்பட்டது.




தங்கள் விவசாய நிலங்களையும், குடியிருக்கும் பட்டாமனைப் பகுதிகளையும் விட்டுத்தர சம்மதித்த இக்கிராம மக்கள். ஒரு வழியாக நிலம் கையகப்படுத்தப்பட்டு 500 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 1000 கோடி மதிப்பில் பல்கலைக்கழக கட்டிடங்கள், துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியருக்கான தங்கும் வீடுகள், அடுக்குமாடிவிடுதிகள், பல்வேறு துறை கட்டிடங்கள், விழா அரங்கங்கள் என பல்வேறு கட்டிடங்கள் வந்தன. 8 மாணவர்களுடன் துவங்கிய  இப்பல்கலைக்கழகத்தில் தற்போது 1000 க்கும் மேற்பட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயில்கிறார்கள்.


தியாகராஜபுரம் பகுதி மக்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே தனித்தீவில் வசிப்பதைப் போன்று வாழ்ந்து வருகின்றார்கள். வசிக்கும் இடமும் பாதுகாப்பாக இல்லை. வசிப்பதற்கு மாற்று இடமும் இல்லை. கடந்த ஆட்சியில் கூறியபடி இப்பகுதி மக்கள் வசிப்பதற்கு மாற்று இடம் குடவாசல் வட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 62 வட கண்டம் கிராமம் எட்டியலூர் உட்கிராமத்தில் நஞ்சை நிலம் நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் விவசாயிகளிடமிருந்து கிரயம் பெறப்பட்டு இப்பகுதியில் வசிக்கும் வீட்டுமனை இல்லாத தியாகராஜபுரம் ஆதிதிராவிடர் மக்கள் உள்ளிட்ட 67 குடும்பத்தினருக்கு வீட்டுமனை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.




இந்த பயனாளிகள் பட்டியல் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதியிட்டு ஆதிதிராவிடர் நல நன்னிலம் தனி வட்டாட்சியர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அரசு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தியாகராஜபுரம் மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே இவர்கள் குடியிருப்பு அமைந்துள்ளதால் மேற்கொண்டு வளர்ச்சிப் பணிகளை பல்கலைகழக நிர்வாகத்தால் செய்ய இயலவில்லை.குறிப்பாக சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நடுவது, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பல்கலைக்கழக நிதியைக் கொண்டு ஆரம்ப சுகாதார நிலையம் அளிப்பது போன்ற பணிகள் தடைபட்டுள்ளது.


மேலும் மோசமாக பாழடைந்துள்ள இடத்தில் உயிருக்குப் பயந்து இப்பகுதி மக்கள் வசிக்கின்றனர். எனவே அரசு அறிவித்தபடி இம்மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள பட்டா மனைகளில் விரைவாக புதிய வீடுகளை கட்டி தர வேண்டும் என்கிறார். அவர்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தரவேண்டும் என்ற நோக்கில் அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகட்ட தேவையாகும் ஆரம்பக் கட்ட பணிகளுக்கு நிதியுதவி செய்ய வழி வகையில்லை என இவரது பரிந்துரைக் கடிதத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிராகரித்து விட்டது.


தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் வீடு கட்டி தர வேண்டும் என அரசுக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.