திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மணிகளை தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகம் உள்ளதால் அங்கு அடுக்கி வைக்கப்படும் நெல் மூட்டைகள் மலை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் முழுமையாக பாதிக்கப்படுவதால் அரசு பாதுகாப்பான கட்டிடங்கள் கட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. 



அதனையொட்டி திருவாரூர் மாவட்டம் கோட்டுர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செருவாமணி கிராமத்தில் 659  ஏக்கர் விவசாய நிலமும், அருகில் உள்ள தாமரை பள்ளம், சிவனாண்டார் கோவில், மடபுரம், இலுப்பூர், விசாலாட்சிபுரம் உள்ளிட்ட 8 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் விளையும் நெல்மணிகளை விற்பனை செய்வதற்கு அங்கு உள்ள விவசாயிகள் செருவமணியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்காக கடந்த 2015-2016 ஆம் ஆண்டு 30 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்காக ஒப்பந்தம் செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது மேற்கூரை அமைக்கப்பட்டு நெல் சேமித்து வைக்க அறைகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த நெல் கொள்முதல் கட்டிடப்பணிகள் தற்போது வரை முழுவதுமாக கட்டி முடிக்கப்படவில்லை. இதுவரை கட்டப்பட்ட கட்டிடமும் தரமாக இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



 

காரணம் புதிதாக கட்டப்பட்ட கொள்முதல் நிலையத்தின் சுவரை விரலால் சுரண்டினாலே சுவரில் உள்ள மண் பொல பொலவென கொட்டுகிறது. அடித்தளம் இடுவதற்கான கற்கள், எம்சாண்ட், போன்ற கட்டுமான பொருட்கள் தரமற்றதாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இங்கு கொள்முதல் நிலையம் கட்டி முடிக்கப்படாததால் அருகில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கில் மூட்டை ஒன்றுக்கு 2 ரூபாய் வாடகை கொடுத்து விவசாயிகள் தாங்கள் நெல் மூட்டைகளை பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இந்த நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டுமானப்பணிகள் முழுமை பெறாமல் தற்போது வரை கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்கவும், கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்யவும் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். எனவே நெல் கொள்முதல் நிலைய மண்டல மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த கட்டிடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.