திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெல் பயிர்களை கொள்முதல் செய்ய 65 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதல்நிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

 


திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் குருவை சம்பா தாலடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்து சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாத காரணத்தினால் மூன்று போகம் நெல் சாகுபடி என்பது ஒருபோகம் சம்பா சாகுபடி பணிகளில் மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த நான்காண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படுவதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



 

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடைக்கு பின்னர் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

அறுவடை செய்கின்ற நெல்லை கொள்முதல் செய்வதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் முதல் கட்டமாக 65 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

 

இதுவரை 1900 மெட்ரிக் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அறுவடை பணிகள் நடப்பதற்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்கப்படும் எனவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முது நிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கோடை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.