நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாய் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஆட்சியர் தெரிவித்தார். இதையடுத்து பட்டினச்சேரி மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடிவு எடுத்துள்ளனர்.


நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாய் உடைந்து கடலில் எண்ணெய் பரவியது. இதனை கண்டித்து நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக நாகை தாலுகா மீனவர்கள் சிபிசிஎல் ஆலையை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். இதனிடையே சிபிசிஎல், மீனவர்கள் மற்றும் வருவாய்துறையினர் ஆகியோர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நாகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாய் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சிபிசிஎல் ஆலை முற்றுகை போராட்டத்தை நாகை தாலுகா மீனவர்கள் இன்று கைவிட்டனர். 



 

இதுகுறித்தான கூட்டம் இன்று நாகூர் பட்டினச்சேரி கிராமத்தில் நடைபெற்றது. இதில் நாகை தாலுகாவைச் சேர்ந்த கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை நம்பியார்நகர் சாமந்தான்பேட்டை மீனவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ஏற்று பட்டினச்சேரி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு நாளை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது என தீர்மானம் நிறைவேற்றினர்.

 

நாகூரில் எண்ணை கசிவு காரணமாக, கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயை அகற்றக்கோரி  பட்டினச்சேரி மீனவர்கள் நடத்தி வந்த தொடர் வேலை நிறுத்த போராட்டம் ஐந்து நாட்களுக்குப் பின் இன்று முடிவுக்கு வந்துள்ளது.