நாகை அடுத்த பணகுடியில் பெட்ரோ கெமிக்கல் மண்டல எதிர்ப்பு போராட்டக் குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர். பாண்டியன் தெரிவிக்கையில்.

 

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சி. பி. சி. எல்) விரிவாக்க பணிக்காக நாகையை அடுத்த பணங்குடி, நரிமணம், கோபுராஜபுரம், உத்தமசோழபுரம் உள்ளிட்ட 40 கிராமங்களில் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. விவசாயிகளின் ஒப்புதல் இன்றி அவர்களின் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் விளைவாக முந்தைய அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவித்தது, இதனால் வேளாண்மைக்கு எதிராக எந்தத் திட்டமும் டெல்டாவில் வராது என விவசாயிகள் நிம்மதி அடைந்து இருந்தனர்.

 

இந்தநிலையில் சிபிசிஎஸ் விரிவாக்கத்தை யொட்டி நாகை மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்குவதற்கான விரிவாக்கத் திட்ட அறிக்கையை தயாரிக்க ரூ 50 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளி அறிக்கையை எம். எஸ். எம். இ. அமைப்பு வெளியிட்டது. இது விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க அனுமதிப்பது மீண்டும் ஒரு பேரழிவு திட்டத்தை ஏற்படுத்துவதற்கு இணையானதாகும். இதனை விவசாயிகள் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டோம். டெல்டா மாவட்ட விவசாயிகள் முதல்வர் முக.ஸ்டாலின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால்தான் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை விவசாயிகள் வெற்றிபெறச் செய்தனர்.

 


 

விவசாயிகளின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கான அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். அதற்காக நிலம் கையகப் படுத்தும் முயற்சிகளை தடை செய்யவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் ஒப்புதல் இன்றி ஒரு ஏக்கர் நிலம் கூட கையகப்படுத்த கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த சில மாதங்களாக இப்பகுதி விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் வெளிநடப்பு செய்து ஆட்சியர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் விவசாயிகளின் கோரிக்கைகளை செவிசாய்க்காமல் இருப்பதுபோல் தற்போதும் செவிசாய்க்கவில்லை என்றால் வரும் 16ஆம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும், கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என பாண்டியன் தெரிவித்தார்.

 

பனங்குடில் நடைபெற்ற பெட்ரோகெமிக்கல் மண்டலத்துக்கு எதிரான போராட்டக் குழு அமைப்பு கூட்டம் போராட்டக்குழு தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், உயர்மட்டக்குழு உறுப்பினர் குணசேகரன் மற்றும் போராட்டக்குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.