நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கிள்ளுகுடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இன்று 100 நாள் வேலை பணி தொடங்கியது. மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து கிள்ளுக்குடி கிராமத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய காலை 7 மணிக்கு வர வேண்டும் என  பயனாளிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆத்திரமடைந்த பயனாளிகள் கீழ்வேளூர் கச்சனம் சாலையில் கிள்ளுகுடி கடைத்தெருவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Urban Local Body Election: கண்ணகி போல் கையில் சிலம்பு ஏந்தி வேட்பு மனு தாக்கல் செய்த பட்டதாரி பெண்
 
அப்போது குடிதண்ணீர் பிடித்தல், உணவு சமைப்பது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல் போன்ற பணிகள்இருக்கும் போது காலை 7 மணிக்கு எப்படி ஆன்லைனில் பதிவு செய்ய செல்ல முடியும் என கேள்வி எழுப்பிய அவர்கள் ஆன்லைன் பதிவு செய்து ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
 
சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர்  காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாத நிலையில் தகவலறிந்த கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால்,  பணி மேற்பார்வையாளர் கணேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.அவர்களின் கோரிக்கையை ஏற்று 8:45 முதல் 10 மணி மணிக்குள் 100 நாள் பணிக்கு வரலாம் எனவும் கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததை அடுத்து இரண்டு மணி நேரமாக நீடித்த சாலை மறியலை கைவிட்டனர்.