திருவையாறு அடுத்த தில்லைஸ்தானம் சிவன்கோயில் தெருவை சேர்ந்தவர் முனிசாமி மகன் பரணி (45) திருமணமான இவருக்கு மதுபழக்கம் உண்டு. இவர் மதுபோதையில் இரவு சுமார் 12 மணி அளவில் தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் சிவன்கோயில் கோபுரத்தில் மதுபோதையில் சுமார் 70 அடி உயரம் ஏறி அங்கிருந்து தற்கொலை செய்துகொள்ளபோவதாக கூச்சல் போட்டார். இதை பார்த்த பொதுமக்கள் திருவையாறு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருவையாறு தீயணைப்பு நிலை வீரர்கள் அருணகணேஷ், வெங்கடேசன், கோபால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 1 மணிநேரம் போராடி கோபுரத்தில் ஏறி கயிற்றைகட்டி பரணிகுமாரை பத்திரமாக மேலே இருந்து கீழே இறக்கினர். இது சம்மந்தமாக மருவூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருவூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சார்லிமேனிடம் பரணியை ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சார்லிமேன் , போதையில் இருந்த பரணியிடம் அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.




இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில்,பரணி கடந்த சில நாட்களாக போதைக்கு அடிமையாகி விட்டார். தினந்தோறும் குடித்து விட்டு, வருவார். போதை அதிகமானால் ஏதேனும் விபரீதமான செயல்களில் ஈடுபடுவார். இதனையறிந்த பொது மக்கள் பரணியின் செயல்களை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் 70 அடி உயரமுள்ள சிவன் கோயில் கோபுரத்தில் திடிரென ஏறி, தற்கொலை செய்து கொள்வதாக கூச்சலிட்டார். அப்போது பொது மக்கள் போதையில் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கின்றார் என விட்டு விட்டனர். அதன் கோயில் கோபுரத்தை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியாகி, தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த தீயணைப்பு தறையினரும், போலீசாரும்,சமாதானம் செய்யும் விதமாக பேசினார்கள். ஆனால் பரணி போதையில் இருந்ததால், தற்கொலை செய்து கொள்ளவதாக மட்டும் பேசி வந்தார்.  அப்போது தீயணைப்பு துறை வீரர்கள், பரணிக்கு தெரியாமல் கோபுரத்தின் மீது ஏறினார்கள்.




கோபுரத்தின் ஆபத்தான நிலையில் நின்று கொண்டிருந்த பரணியை லாவகமாக பிடித்து, கீழே இறக்கினார்கள். பின்னர், பரணி கீழே அமர வைத்து, தண்ணீர் தெளித்து, குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், வீண் பிரச்சனைகள், குடும்பத்தின் நிலையை பற்றி போலீசார், அறிவுரை கூறினார்கள். அதன் பிறகு சிறிது நேரத்தில் போதை தெளிந்த பரணி தான் செய்த செயலை நினைத்து மன வேதனைப்பட்டு, வீட்டிற்கு சென்றார். குடிபோதையினால், தான் குடும்பத்தை பற்றி கூட கவலைப்படாமல் தற்கொலை செய்யும் அளவிற்கு துாண்டியுள்ளதை அறிந்த பொது மக்கள் மன வேதனையுடன் புலம்பினர் என்றனர்.