ஒரு நெல்மணி கூட சேதம் அடையக்கூடாது என்பதுதான் முதல்வரின் எண்ணமாக உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பெருமிதத்துடன் கூறினார்.

 

தஞ்சாவூர் அருகே முன்னையம்பட்டியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.

 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 103 திறந்தவெளி சேமிப்பு கிடங்கு உள்ளது. இதில் முதற்கட்டமாக, மூன்று லட்சம் மெட்ரிக் டன், கவர்ட் செமி குடோன் அமைக்க, சுமார்  300 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொண்டு வருகின்ற நெல்லை கொள்முதல் செய்து, திறந்தவெளி சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லாமல், அரவை ஆலைகளுக்கு அனுப்புகின்ற திட்டத்தையும், அரசு பரிசீலனை செய்து வருகிறது.


விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லில் ஒரு நெல்மணி கூட, சேதாரம் அடையக்கூடாது என்பதுதான், முதல்வரின் எண்ணமாக உள்ளது. முன்னையம்பட்டி, உளுந்துார்பேட்டை இருந்த 26 ஆயிரம் மெட்ரிக் டன்னில், 16 ஆயிரம் மெட்ரிக் டன் அரவைக்காக அனுப்பப்பட்டது. இன்னும் 10 ஆயிரம் மெட்ரிக் டன்  இன்னும், ஒரு வார காலத்திற்குள்ளாக, அரிசி ஆலைகளுக்கு, அனுப்ப உள்ளோம். 

 



 


நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எந்த தவறும் நடக்கக்கூடாது என்பதற்காக, கலெக்டர், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மொபைல் எண் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் பெட்டி வைக்கப்பட்டு அதன் சாவி கலெக்டர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. வாரம் ஒரு முறை வருவாய்துறை அதிகாரிகள் புகார் பெட்டியை திறந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  

செப்டம்பர் 1ம் தேதி நெல் கொள்முதல் பணிகள் தொடங்கப்படும். அதற்கு தேவையான தார்பாய்கள், கொள்முதல் செய்யக்கூடிய சாக்கு, சணல் தேவையான அளவு கையிருப்பு இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில், கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் 378 அரவை அலைகள் மட்டுமே இருந்தது. இந்திய உணவு கழகம் 106 இடங்களில் கருப்பு, பழுப்பு நீக்கும் கருவி பொருத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. ஆனால், அவ்வாறு அவர்கள்  பொருத்தவில்லை. தற்போது தி.மு.க.,ஆட்சிக்கு வந்த பிறகு 637 தனியார் அரவை ஆலைகளாகவும்,  நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலைகள் 21 என உயர்த்தப்பட்டுள்ளது. இதில், 658 ஆலையிலும் கருப்பு,பழுப்பு நீக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய உணவு கழகம் சொல்வதை நடைமுறைப்படுத்தியது தி.மு.க., தான்.  

தனியார் பங்களிப்புடன் தஞ்சாவூரில் நாள்தோறும் தலா 500 மெட்ரிக் டன் அரைக்கும் வகையில் இரண்டு, திருவாரூரில் இரண்டும், மயிலாடுதுறை மற்றும் கடலுாரில் ஒன்றும் என 6 ஆலைகளுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாகை,செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, 88 மெட்ரிக் டன்னில் தஞ்சாவூர், திருவாரூரில் இரண்டும், தேனியில் 200 மெட்ரிக் டன்னில் ஒன்றும் என ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  

கோவில்பத்து கிராமத்தில் 230 கோடி ரூபாயில், அ.தி.மு.க., ஆட்சியில் அமைக்க ஒரு லட்சம் மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு திறக்கப்படாமல் உள்ளது. மழை பெய்தால் எந்த லாரியும் அதன் உள்ளே சென்று வர முடியாது. போதிய மின்வசதி கிடையாது. தற்போது சிமெண்ட் சாலை அமைக்கவும், மின்வசதி ஏற்படுத்தவும் 6 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
பத்தாண்டு காலத்தில் அ.தி.மு.க., ஆட்சியில், கொள்நிலையங்களை சிறப்பாக செய்து இருந்தால் முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிக்கையும் விட வேண்டி அவசியும் இல்லை, நானும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இதை செய்யாமல் இன்றைக்கு அறிக்கை விடுவது நியாயமாக உள்ளதா. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண