பாரதியாருக்கு அடைக்கலம் தந்த திருவாரூர் மேலநாகை கிராமம் 

 

இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற கிராமத்து குடிமகன் முதல் தேசிய தலைவர்கள் வரை பலரும் பல விதமான தியாகங்களை செய்துள்ளனர். மக்களிடையே சுதந்திர உணர்வை தூண்ட அகிம்சை வழியிலும் போராட்ட வழியிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டதால் இந்திய தலைவர்கள் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்படி இருந்தும் ஆங்கிலேயரின் சிறைகளில் சிக்காமல் அவர்கள் கண்ணில் மண்ணை தூவி, பல்வேறு இடங்களுக்கு  சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தி மக்களிடையே கவிதைகள் மூலமும் பாடல்கள் மூலமும் தமிழ் மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டிய தேசிய தலைவர்களில் ஒருவர் நம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.



இந்தியா இதழில் ஆங்கிலேயருக்கு எதிராக வெளியான கட்டுரைகளை காரணம் காட்டி அவ்விதழின் உரிமையாளரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். அதில் பணிபுரிந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரையும் கைது செய்ய ஆங்கிலேயர் முனைந்துள்ளனர் என்று கேள்விப்பட்டு பாரதியார் புதுச்சேரிக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் புதுச்சேரியில் "இந்தியா" இதழைத் தொடர்ந்து நடத்தியதோடு சுதந்திர போராட்ட வீரர்கள் பலரும் பாரதியாருடன் நட்பு கொண்டிருந்தார். பாரதியாரை எப்படியாவது கைது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் போலீசாரை அனுப்பி பாரதியாரை தேடி வந்தது. இத்தகைய இக்கட்டான சூழலில் பாரதியாருக்கு ரகசியமாக அடைக்கலம் தந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி.



1918-ஆம் ஆண்டு மன்னார்குடிக்கு அருகிலுள்ள மேல நாகை கிராமத்தில் கோடியாளம் கே.வி.ரெங்கசாமி ஐயங்கார் வீட்டில் 10 நாட்கள் தங்கி இருந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தினார் பாரதியார். அப்போது ஆங்கிலேயர்கள் தன்னை அடையாளம் காணாதபடி பாரதியார் தனது தனித்துவமான அடையாளமாக இருந்து வந்த கட்டும் முண்டாசு இல்லாமலும், மீசையை எடுத்துவிட்டு மாறுபட்ட தோற்றத்தில் மேல நாகை கிராமத்தில் வலம் வந்துள்ளார் பாரதியார். 1829-ஆம் ஆண்டு வேதாரண்யம் பகுதியில் பிறந்த வாசுதேவர் என்ற யோகி சிறு வயதிலேயே மன்னார்குடிக்கு வந்து அருகிலுள்ள மேல நாகை கிராமத்தில் தங்கி மந்தாகினி குலத்தில் நீராடி, தியானம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். பின்னாளில் இவர் தவம் செய்வதற்காக பிரணவ சக்கர வடிவில் "குஸ்மா கரகம்" ஒன்றை கட்டி அதில் வாசுதேவர் தனது சீடர்களுடன் அமர்ந்து தியானம் செய்து வந்துள்ளார்.

 

பாரதியார் மேல நாகையில் கோடியாளம்  வீட்டில் தலைமறைவாக இருந்தபோது அருகில் இருந்த இந்த குஸ்மாகரகத்திற்கு வந்து அமர்ந்து தியானம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குஸ்மாகரகத்தில் தான் தற்போது பாரதியாரின் நினைவாக அவரது உருவ சிலை நிறுவப்பட்டு அவரது நினைவு நாள்,சுதந்திர தினம், பிறந்த நாட்களில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கிராமங்களும் நகரங்களாக மாறிவரும் நிலையில் இன்றும் இந்த மேல நாகை கிராமம் தென்னை, வாழை,கடலை என பசுமை காடாகவே காட்சியளிக்கிறது.

 

பாரதியாருக்கு நூற்றாண்டு கொண்டாடும் இந்த வேளையில் அவர் இங்கு வந்து தங்கி இருந்த அக்காலத்தில் இந்த மேலநாகை கிராமம் இன்னும் அதிக வளங்களுடன், செழிப்பாக இருந்திருக்கும். தஞ்சை தரணியின் இந்த எழில் சூழ்ந்த கிராமத்தின் அழகை ரசித்த பாரதியார் "பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு" எனும் பாடலை இங்கு இயற்றியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இங்கு மந்தாகினி குளக்கரையில் அமைந்துள்ள மந்தாகினி அம்மனை பாரதியார் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. மகாகவி பாரதியாரால் பெருமை பெற்றுள்ள இந்த மேல நாகை கிராமத்தில் பாரதியார் வந்து சென்ற இவ்விடத்தை சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும் என  இப்பகுதி மக்களும், இங்குள்ள மகாகவி பாரதியார் அறக்கட்டளையும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.