184வது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காட்சி தகவல் தொடர்பியல் துறை மாணவர்களின் புகைப்பட  கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


புகைப்படம் என்றாலே எல்லோருக்கும் ஸ்பெஷல் தான். நம் வாழ்வின் எதோ ஒரு சந்தர்ப்பத்தை நேரடியாக நினைவு படுத்தும் ஒரே விஷயமாக இந்த உலகில் உள்ளது. மனிதன் தன்னைத் தானே மெச்சிக்கொள்ளும் ஒரு சில கண்டுபிடிப்புகளில் புகைப்படம் ஒன்று. அப்படியாக பல நினைவுகளை, அழுகைகளை, உணர்வுகளை உலகெங்கும் தாங்கி நிற்கின்றன லட்சோப லட்ச புகைப்படங்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமின்றி புகைப்படம் முக்கியமான சமூக பிரச்சனைகளில் வகிக்கும் இடம் மிகப் பெரியது. பல கலவரங்களை, போர்களை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை பல புகைப்படக்காரர்களுக்கு உண்டு.




2003 குஜராத் கலவரத்தில் இருந்து வந்த புகைப்படம் ஆகட்டும், சமீபத்தில் மணிப்பூர் கலவரத்தில் இருந்து வெளிவந்த பெண்களின் நிர்வாண ஊர்வல புகைப்படம் ஆகட்டும்… வார்த்தைகள் கொண்டு செல்வதை விட அதிக மக்களுக்கு, அதிக ஆழத்துடன் விஷயங்களை கடத்துவதில் பெரும் பங்கு புகைப்படங்களுக்கு உண்டு. துக்கமும், இன்பமும், நினைவுகளும் எல்லாம் கலந்த இந்த புகைப்படங்கள் என்னும் விஷயத்தை கொண்டாட ஒரு தினம் தான் உலக புகைப்பட தினம். 


No new release: என்ன ஆனது வெள்ளிக்கிழமை ஜோசியம்? ஜெயிலரால் சிறையில் இருக்கிறதா புத்தம் புது படங்கள்...?




உலக புகைப்பட தினத்தின் வரலாறு 1837 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அப்போது பிரெஞ்சுக்காரர்களான லூயிஸ் டாகுரே மற்றும் ஜோசப் நைஸ்ஃபோர் நீப்ஸ் ஆகியோர் முதல் புகைப்பட செயல்முறையான டாகுரோடைப்பை உருவாக்கினர். இந்த கண்டுபிடிப்பின் காப்புரிமையை பிரெஞ்சு அரசாங்கம் "உலகிற்கு இலவசமாக" வழங்கியது. இது தொடர்பான பொது அறிவிப்பு ஆகஸ்ட் 19 அன்று வெளியிடப்பட்டது. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.


184வது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காட்சி தகவல் தொடர்பியல் துறை மாணவர்களின் 18-வது புகைப்பட கண்காட்சி!


மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தலில் அமைந்துள்ளது அரசு உதவி பெறும் பழம் பெருமை வாய்ந்த ஏவிசி கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரியில் 184- வது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு காட்சி தகவல் தொடர்பியல் துறை சார்பில் 18-வது புகைப்பட கண்காட்சி துவக்க விழா நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே.வெங்கட்ராமன் கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார். 




இதில் இந்திய கலாச்சாரம்,  மனிதனின் உணர்வுகளை வெளிக்காட்டும் புகைப்படங்கள் மற்றும் சுதந்திரத்தின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையிலான பாரம்பரியத்தை பறைசாற்றும் புகைப்படங்கள், இயற்கையின் அதிசயங்களை கண்டு வியக்கும் வகையிலான காட்சிகள் என பலதரப்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.




இதில் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். நாகராஜன், தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் மேஜர்.ஜி. ரவிசெல்வம் ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குனர் செந்தில்முருகன், ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர் வளவன் மற்றும் முதல்வர் கண்ணன்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை காட்சி தகவல் தொடர்பியல் துறை தலைவர் டாக்டர் சங்கர் தலைமையிலான பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். இந்த கண்காட்சியினை கல்லூரியை சேர்ந்த பிற துறை மாணவர்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.