தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், திருச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில், மூன்று போகம் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், போதிய மழையின்மை, உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்காத காரணம் என விவசாயம்  இரண்டு போகமாக மாறிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்துப்போனதால், தற்போது ஒரு போக சாகுபடி மட்டுமே செய்து வருகின்றனர். 




குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜீன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் சுமார் 100 அடியை நெருங்கியுள்ளது. நிலத்தடி நீர் வசதி உள்ள மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, உள்ளிட்ட தாலுகாக்களில், மின் மோட்டார் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உழவடித்தல், நாற்றங்கால் அமைத்தல், அண்டை வெட்டுதல், நிலத்தை சமன்படுத்துதல் போன்ற முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றது. நிலத்தடி நீர் இன்றி, காவிரி நீரை நம்பியுள்ள பகுதிகளில், புழுதி உழவு செய்து, நேரடி விதைப்பில் விவசாயிகள் கவனம் செலுத்திவருகின்றனர். 




தற்போது சுமார் 96 அடியாக மேட்டூர் நீர்மட்டம் உள்ள நிலையில், ஜீன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. பாய் நாற்றங்கால் அமைத்து மிஷின் மூலம் விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 




இதனிடையே தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் ஆறு மற்றும் வாய்கால்களில் 65 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகளைத் தொடங்கியுள்ளன. இதில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும், இப்பணிகள் முழுமையாகவும் வேகமாகவும் நடைபெறுவதற்காகவும், 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியன 431 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் தற்போது தூர்வாரப்படுகிறது. இதற்காக 5 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மே மாதம் 28 ஆம் தேதி கனரக வாகனங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 




 




இப்பணிகளை வரும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்காக திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தடைவதற்கு முன்னதாக முடிக்க திட்டமிடப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் குறுவை சாகுபடி மேற்கொள்ள வசதியாக விவசாயக்கடன் தள்ளுபடி, சிறப்புத்தொகுப்புத் திட்டங்களை அறிவித்து, தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.