மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான விவசாயி பாலமுருகன். இயற்கை ஆர்வலரான இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் நஞ்சில்லா பாரம்பரிய இயற்கை மூலிகை நெல் ரகங்களான ஆத்தூர் கிச்சிலி சம்பா, தூயமல்லி, கருப்புக்கவுனி போன்ற ரகங்களை விளைவிக்க விரும்பினார். பொதுவாக, வயலில் நாற்றங்கால் வளர்க்க வயலில் தண்ணீர் பாய்ச்சி, உழவடித்து, நிலத்தை சமன்படுத்தி, மேட்டுப்பாத்தி அமைத்து நாற்றங்கால் வளர்ப்பதைப் போல் இல்லாமல் தனது வீட்டு மாடியிலேயே நாற்றங்கால் வளர்ப்பது குறித்து யோசித்து அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார்.




முதற்கட்டமாக ஒன்றரை ஏக்கருக்கான ஆத்தூர் கிச்சிலி சம்பா, ஒன்றரை ஏக்கருக்கான தூயமல்லி நாற்றங்கால்களை மாடியிலேயே உருவாக்கியுள்ளார். சேறில்லா விவசாய முறையாக முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயந்திர நடவுக்கான நாற்றுக்களை சேறுக்கு பதிலாக கருக்காய், தேங்காய் நார் கழிவு உரம், மரத்தூள் போன்றவற்றைக் கொண்டு பிளாஸ்டிக் ட்ரேயில் நெல் விதைகள் பரப்பி நாற்றுக்களை உருவாக்கியுள்ளார். நாற்றுகளுக்கு தேவையான நீரை தெளித்து  பாய்ச்சுகிறார். இதனால் நாற்றுக்கள் 17 நாள்களில் நாற்றின் வேர் பகுதி சேதமாகாமல், சேறும் சகதியும் இல்லாமல் அப்படியே எடுத்து சுருட்டி நடவுக்கு அனுப்புகிறார்.



  


இதனால், வயலில் நட்டால் நாற்றுக்கள் மழையில் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் இவருக்கு இல்லை. மேலும், வயலில் நாற்றங்கால் விடுவதைவிட குறைந்த செலவே ஆகிறது. இதற்கான கலப்பில்லா, முளைப்புத்திறன் அதிகமுள்ள நெல் ரகங்களை வீரசோழன் உழவன் உற்பத்தி நிறுவனம் ஐசிஐசிஐ பவுன்டேஷனுடன் இணைந்து வழங்கிவருகிறது. பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்கம் செய்யும் முனைப்புடன் நெல்லை வழங்கி வரும் இவர்கள் அதனை விலைக்கு தருவதற்கு பதிலாக, தரும் விதை நெல்லைவிட இரண்டு மடங்காக திரும்பப் பெற்று பாரம்பரிய ரகங்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.



ஐசிஐசிஐ பவுன்டேஷன் இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 டன் விதை நெல்லை வழங்கியுள்ள நிலையில், விவசாயி பாலமுருகன் மட்டுமே அதனை மாடியில் வளர்த்து பலனும் கண்டு சாதனையும் படைத்துள்ளார். இவரது செயல்பாடுகளை வேளாண் ஆர்வலர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். வரும் கால கட்டங்களில் விவசாயம் செய்வதற்கு நீர் பற்றாக்குறை குறைந்து விடும் என்ற நோக்கில் முற்போக்குச் சிந்தனையில் இந்த பாரம்பரிய விதைகளை குறைந்த நீர் செலவில் உருவாக்கினேன் என்று பாலமுருகன் கூறினார். இது போன்ற விவசாய திட்டத்தை இளைஞர்கள் கையில் எடுத்து மாடித்தோட்டத்தில் இதுபோன்று பயன்படுத்தி குறைந்த நீர் செலவில் பாரம்பரிய நெல் நாற்றங்காலை மீட்டெடுப்போம் என்ற முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.