மாட்டுப்பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சாய் பசு மடத்தில் உள்ள கால்நடைகளுக்கு மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது. மடத்ல் உள்ள கால்நடைகளை குளிப்பாட்டி மலர் மாலைகள் அணிவித்து மஞ்சள் சந்தனம் பூசி மரியாதை செய்யப்பட்டு கால்நடைகளுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.



 

தொடர்ந்து பசு மடத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் பலவகைகள் மாடுகளுக்கு கொடுத்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள பசு மடங்கள் கால்நடை பண்ணைகளில் மாட்டுப் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டன. விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு இதேபோன்று மாலை அணிவித்தும் கொம்புகளில் வர்ணம் பூசி சிறப்பு உணவுகளை அளித்தும் மாட்டுப் பொங்கல் விழாவை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

 



 

இந்த ஆண்டு கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக சாய் பசு மடத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து மாட்டுப் பொங்கல் விழாவை கொண்டாடினர். மேலும் இன்று மாட்டுப் பொங்கல் குறித்து சாய் பசு மடத்தின் நிர்வாகி கனகசபாபதி கூறுகையில், நேற்றைய தினம் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தற்பொழுது கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இன்றைய தினம் திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கால்நடைகளை வணங்கி அந்த கால்நடைகளுக்கு அனைத்து விதமான நலன்களை செய்யும் வகையில் இந்த மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

 

கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் குறிப்பாக ஆண்டு முழுவதும் கால்நடைகள் விவசாயிகளுக்கு உற்ற தோழனாக இருந்து பல்வேறு வகைகளில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் கால்நடைகள் உதவி வருகிறது. கால்நடைகளில் இருந்து உணவு பொருட்கள் குறிப்பாக பால் உள்ளிட்ட பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். அதனையொட்டி இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து சிறப்பாக இந்த மாட்டு பொங்கலை கொண்டாடி வருகின்றோம். இதேபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த மாட்டுப் பொங்கல் விழா அரசு விதிமுறைகளை பின்பற்றி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.