திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஹரித்ரா நதி தெப்பக்குளம் வடகரை பேருந்து நிறுத்தத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு காசி என்கின்ற இளைஞர், ஆதரவற்ற நிலையில் இருந்து வந்துள்ளார். தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாத நிலையில் மனநலம் பாதித்த அந்த இளைஞர் குறித்து அப்பகுதி மக்கள் மன்னார்குடியில் செயல்படும் நேசக்கரம் அமைப்புக்கு தெரியப்படுத்தி அவரை குணப்படுத்த கேட்டுக்கொண்டனர்.



 

அதன்படி நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் சிரில், ஜான்சன் ஆகியோர் மனநலம் பாதித்த இளைஞர் காசியை நேரில் சந்தித்து அவர் பற்றிய விவரங்களை சேகரித்தனர் பின்னர் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை நேசக்கரம் அமைப்பின் சார்பில் செய்ய தொடங்கினர். அதன் பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருச்சி அருகே உள்ள சாந்திவனம் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் காசி. அங்கு இளைஞர் காசிக்கு மனநல மருத்துவர்கள் காசிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தன்னுடைய வேலையை தானே செய்து கொள்கின்ற அளவுக்கு மனதளவிலும், உடலளவிலும் குணம் அடைந்துள்ளார்.




இந்நிலையில் இளைஞர் காசியை சாந்திவனம் மனநல காப்பகத்தினர் காசிக்கான சிகிச்சை முடிவடைந்த பின்னர் கடந்த மாதம் 24 ஆம் தேதி மன்னார்குடியில் நேசக்கரம் அமைப்பிடம் ஒப்படைத்தனர். மனநலம் பாதித்த நிலையில் மன்னார்குடியில் வசித்த இளைஞர் காசி, குணமடைந்து மீண்டும் மன்னார்குடிக்கு அழைத்து வந்த போது மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மன்னார்குடி நகராட்சி ஆணையர் செண்ணுகிருஷ்ணன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயகுமார் முன்னிலையில் நேசக்கரம் அமைப்பின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மன்னார்குடி காவல் ஆய்வாளர் விஸ்வநாதன்  முன்னிலையில் காசியை  ஆஜர்படுத்தி  தொடர்ச்சியாக நேசக்கரம் அலுவலகத்தில் தங்கவைக்கப்ட்டுள்ளார். 

 

தற்போது இந்த இளைஞர் பந்தலாடி பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது, உணவகத்தை தூய்மை செய்வது போன்ற சிறு சிறு வேலைகளை செய்து வருகிறார். இதன் மூலம்  காசி பொது மக்களோடு இயல்பாக பழகவும், சராசரி வாழ்க்கையை வாழவும் கற்றுக்கொள்ள தொடங்கியுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த காசி இன்று சாதாரண மனிதரைப் போல அனைவரிடம் பழகி வருவது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



 

மன்னார்குடியில் செயல்பட்டு வரும் நேசக்கரம் அமைப்பு தொடர்ந்து பல்வேறு பொதுநல செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக மன்னார்குடியில் உள்ள பல்வேறு கட்சியினரும், அதேபோன்று அரசின் சார்பில் பல்வேறு உதவிகளும் நேசக்கரம் அமைப்பிற்கு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆதரவற்ற இறந்த மனிதர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வது, ஆதரவற்ற முதியவர்களுக்கு மருத்துவ உதவி செய்வது, நீர் நிலைகளை சீரமைப்பது போன்ற பல பொது பணிகளை செய்து வரும் மன்னார்குடி நேசக்கரம் அமைப்பு உடல் நோய்களை போல மன நோய்களையும் குணப்படுத்த முடியும் என்பதற்கு சாட்சியாக மனநலம் பாதித்த இளைஞர் காசியை குணப்படுத்தி அரவணைக்க தொடங்கியுள்ளது, மன்னார்குடி மக்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.