விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவது வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் போது ஒரு அடி முதல் ராட்சத உயரம் வரை விஸ்வரூப விநாயகரை வைத்து வழிபாடு செய்து, மேளதாளத்துடன விமர்சையாக ஊர்வலம் ஊர்முழுவதும் சென்று தண்ணீரில் கரைப்பார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடைவிதித்துள்ளதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 



இதனையடுத்து தஞ்சை மாவட்ட இந்து முன்னனி சார்பில், தமிழக அரசுக்கு, வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை சீரும் சிறப்புமாக நடைபெறவேண்டும். தமிழக அரசுக்கு நல்ல ஞானத்தை கொடுத்து விழாவிற்கு ஒத்துழைப்பு கொடுக்க வைக்க வேண்டும், விழாவினை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டும் என பக்தர்கள் நாங்கள் உங்கள் பாதம் தொட்டு வணங்கி வேண்டுகிறோம் என்ற கோரிக்கை மனுவை, தஞ்சை பெரியகோயிலிலுள்ள நந்தி பகவான், மூலவர் பிரகதீஸ்வரர்சுவாமி, பெரியநாயகி அம்மன் உள்ள அனைத்து தெய்வகங்களிடமும் வைத்து எங்களது கோரிக்கை நிறைவேற்றி தர வேண்டும், தமிழக அரசுக்கு நல்ல ஞானத்தை கொடுக்க வேண்டும் என பிராத்தனையில் ஈடுபட்டனர்.



கோரிக்கை மனுவை, மூலவர் பிரகதீஸ்வரர் சுவாமி மீது வைத்து, அர்ச்சகர், தீபம் காட்டி, வேண்டும் பிராத்தனை நிச்சயம் நடக்கும் என மந்திரங்களை கூறி சிறப்பு வழிபாடு செய்து, இந்து முன்னனியினரிடம் வழங்கினார். பின்னர். விநாயகர் உருவம் பொருத்தியபடி, கோயில் சுற்றி பிராகரம் முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற வேண்டி, கோஷங்களிட்டவாறு வந்தனர். கோயிலின் வாயிற் பகுதிக்கு வந்து விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க வேண்டும், இந்துக்கள் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்க கூடாது என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலபொது செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசானசிவம், மாவட்ட பொது செயலாளர் நலமுருகன், மாவட்ட செயலாளர் குபேந்திரன், மாநகர தலைவர் சதீஷ், மாநகர பொதுசெயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அதியமான் மாவட்ட துணை தலைவர் குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களிட்டனர். பெருமான்மையான இந்துக்களின் பழிவாங்கும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. சமூக இடைவெளியிடன் சொந்தமான இடத்தில் வைத்து விநாயகர் வழிபாடு செய்யலாம், ஊர்வலம் நடத்தலாம் என கடந்தாண்டு உத்தரவு உள்ளது. எனவே சட்டப்படி விநாயகர் சதுர்த்தி விழாவினை நடத்துவோம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.