தஞ்சாவூர்: நம்பி ஏமாந்துட்டோம்... கண்ணீருடன் கதறியபடியே தஞ்சை டிஐஜி அலுவலகத்தில் திரண்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் சீனிவாசபுரத்தில் பல ஆண்டுகளாக மலேசியா சுந்தரம் நகைக்கடை இயங்கி வந்தது. இந்தக் கடையை ராஜா (50) என்பவர் நடத்தி வந்தார். இவரது வீடும் அதன் அருகிலேயே இருந்தது. இந்த கடையில் சீட்டு பணம், பழைய நகைகளை கொடுத்தால் அதே எடையில் குறைந்த செய்கூலி , சேதாரத்தில் புதிய டிசைனில் நகைகள் செய்து கொடுப்பது, நகைகளாக கொடுத்தால் அதனை ஆபரணங்களாக செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார் உரிமையாளர் ராஜா. மேலும் மேற்கண்ட பணிகளில் ராஜா ஈடுபட்டு வந்து வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார். குறைந்த பணம், சொன்னது போல் புதிய டிசைன் என்று வாடிக்கையாளர்களை கேட்பதை செய்து கொடுத்து வந்துள்ளார். இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் மேற்கண்ட திட்டத்தில் இணைந்தனர். இதற்காக சீட்டு பணம் கொடுத்தல், பழைய நகைகளை கொடுத்தல், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு நகைகளை சரியாக திருப்பிக் கொடுக்கவில்லை. மேலும் கட்டிய சீட்டு பணத்திற்கும் உரிய நகைகளும் கொடுக்கவில்லை . இதனால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் பலர் தொடர்ந்து கடை உரிமையாளர் ராஜாவிடம் கொடுத்த நகைகளை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டு முறையிட்டனர். அதற்கு ராஜா இன்று, நாளை என்று காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு நகைக்கடை மற்றும் வீடு ஆகியவற்றை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ராஜா தலைமறைவாகி விட்டார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ராஜா குறித்து விசாரித்த போது அவர் எங்கு தலைமறைவானார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 85-க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் தஞ்சாவூா் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நகை, பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் செய்தனர். அந்த புகாரில் மலேசியா சுந்தரம் நகைக்கடை உரிமையாளர் ராஜா பலரை ஏமாற்றி தலைமறைவாகிவிட்டார். சுமார் ரூ.50 கோடிக்கும் மேல் அவர் மோசடி செய்துள்ளார். இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர் மோசடி செய்த பணத்தின் மதிப்பு இன்னும் பல கோடியை எட்டும். எனவே தலைமறைவான ராஜாவை பிடித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . நாங்கள் கொடுத்த வெள்ளி, தங்க நகைகளை மீட்டு தர வேண்டும். சீட்டிற்காக செலுத்திய பணத்தையும் மீட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
புகார் கொடுத்தவர்களில் சிவசங்கரி என்ற பெண் கண்ணீர் மல்க கூறியதாவது: என் தங்கையின் திருமணத்திற்கு பழைய நகைகளை கொடுத்து புதிய டிசைனில் குறைந்த சேதாரம், செய்கூலியில் செய்து கொடுத்து இ ருந்தார். எனக்கு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. என் தங்கையின் திருமணத்திற்கு நல்லபடியாக நகை செய்து கொடுத்தார் என்ற நம்பிக்கையில் இப்போது 17 கிராம் பழைய நகையை கொடுத்து இருந்தேன். இப்போ அவர் தலைமறைவாகி விட்டார். என்ன செய்ய போகிறோம் என்றே தெரியவில்லை என்று அழுதபடியே கூறினார்.
தொடர்ந்து மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.ஐ.ஜி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது . தொடர்ந்து பொதுமக்கள் டிஐஜியிடம் கொடுத்த புகார் மனுக்களின் அடிப்படையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நகைக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் வீடியோ பதிவு செய்து கடையை சோதனையிட்டனர் அதில் எந்தவித ஆவணங்களும், தங்க ஆபரணங்களும் கிடைக்கவில்லை. தங்க முலாம் பூசப்பட்ட சில கவரிங் நகைகளும், சில வெள்ளி நகைகளும் மட்டுமே இருந்தன.
சிலரின் காசோலைகளும் அங்கு போலீசாருக்கு கிடைத்துள்ளது. மற்றபடி நகைகளோ, வெள்ளிப் பொருட்களோ எதுவும் இல்லாமல் கடையை துடைத்தது போன்று காட்சியளித்துள்ளது. இந்த சம்பவம் தஞ்சை நகரத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது. ஏற்கனவே இதேபோல் பிரபல நகைக்கடை உரிமையாளரும் எஸ்கேப் ஆன சம்பவமும் தஞ்சையில் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.