தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் புறவழிச்சாலை அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். திருவையாறு கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பலருக்கும் பல்வேறு வகையிலும் பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டே வந்தது. பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து புறவழிச்சாலை அமைக்க திருவையாறு, கண்டியூர், மணக்கரம்பை , கீழ திருப்பந்துருத்தி, கல்யாணபுரம் உள்ளிட்ட ஊர்களில் 100 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளுக்கான அளவீடும் எடுக்கும் பணிகளும் நடந்தது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும், மூன்று போகம் விளையும் நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
மேலும், பெரம்பலுார் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில், அரசூர், காட்டுக்கோட்டை, கீழ திருப்பந்துருத்தி, நடுபடுகை, தில்லைஸ்தானம், திருவையாறு, அந்தணர் குறிச்சி வழியாக விளாங்குடி சாலை இணைப்பு திட்டமாக சுமார் 8 கிலோமீட்டர் வரையில், நிலங்களை கையகப்படுத்தி புறவழிச்சாலை அமைக்கப்படும் என கடந்த ஆண்டு மத்திய அரசு, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. புறவழிச் சாலை அமைக்கப்பட்டால், உளுந்து, தென்னை, வாழை உள்ளிட்ட விளை நிலங்கள் பாதிக்கப்படும். எனவே, கண்டியூர், நடுக்கடை, திருவையாறு ஆகிய பகுதிகளில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றினால், போக்குவரத்து பாதிக்காது, விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தினால், வாழ்வாதாரம் கேள்வி குறியாகும் என மூன்றாவது முறையாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.