தஞ்சாவூர்: பொய்யை விதைத்து விவசாயிகளுடைய வாக்குகளை எல்லாம் அறுவடை செய்யலாம் என்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் எண்ணம் ஒருபோதும் நடக்காது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்படும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூரில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 4,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்படுகின்றன. அதே போல், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு நாளைக்கு 2,000 மெட்ரிக் டன் நெல் கொண்டு செல்லப்படுகிறது. நமது அரசு விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் அரசாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
இதை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, பல தவறான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். குறிப்பாக, நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் பற்றி முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லியுள்ளார். அதில், திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்து செல்லாததால், அங்கே புதிய நெல் மூட்டைகளை வைக்க இடமில்லை என்று ஒரு தவறான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
வழக்கமாக குறுவை சாகுபடி காலத்தில், அக்டோபர் 1ம் தேதி தான் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டில் இருந்து டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, செப்.1ம் தேதியே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு சென்ற செப்.1ம் தேதி முதல் நேற்று வரை அதாவது 50 நாட்களில், 1,825 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 10 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், எட்டு லட்சம் மெட்ரிக் டன் அளவிலான நெல் மூட்டைகள் குடோனுக்கு ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதம் உள்ள 1,93,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை குடோனுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது.
இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள்ள அந்த பணிகளும் நிறைவடையும். குறிப்பாக, டெல்டாவில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்னும் சுமார் இரண்டு லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை வைக்கும் அளவிற்கு இடவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதியதாக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை வைப்பதற்கு இடம் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறிய குற்றச்சாட்டு தவறானது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், சென்ற ஆண்டு குறுவை சாகுபடி காலத்தில், மொத்தமாகவே 200 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் தான் திறக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு, 300 நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்பட்டுள்ளன. தென்னமநாடு, ஒக்கநாடு கீழையூர் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 3,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. ஒரத்தநாடு புதுார், திருவையாறு, விளங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 2000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால், 800 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யபடுவதாக ஒரு லோடுமேன் கூறியதாக, ஒரு தவறான குற்றச்சாட்டை பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு குறிப்பிட்ட கொள்முதல் நிலையத்தில் ஒரு நாள் 800 மூட்டைகள் கொள்முதல் செய்து இருந்தால், தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 800 மூட்டைகள் தான் கொள்முதல் செய்யப்படுகிறது என அர்த்தம் கிடையாது. ஆயிரம் மூட்டைகள் அல்ல, கூடுதலாக வந்தாலும் கொள்முதல் செய்வதற்கு அனைத்து வசதிகளையும் அரசு செய்துள்ளது. விவசாயிகள் யாரும், எந்த இடத்திலும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என இதுவரைக்கும் எந்த புகார் மனுவும் அளிக்கவில்லை. பழனிசாமி மட்டும் தான் பொய் புகார்களை கூறி வருகிறார். நெல்லை எடுத்து செல்ல போதிய லாரிகள் இல்லை என்றும் பழனிசாமி கூறியுள்ளார். ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் 20,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 16,000 நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதே போல நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டது என்ற ஒரு நாடகத்தை பழனிசாமி நடத்தியுள்ளார்.
அதில் பெண் ஒருவர் முளைத்து விட்டதாக கூறி இருந்தார். உடனே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெண்மணி ஊரான வரவுக்கோட்டைக்கு சென்று, ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், அந்த பெண் ஐந்து ஏக்கர் குத்தகை நிலத்தில் நடவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரது வயலில் நேற்று மதியம் வரை எந்த அறுவடையும் நடைபெறவில்லை. அறுவடையே நடைபெறாத வயலிலிருந்து அவர் எப்படி நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தார் என்பது அவருக்கு தான் வெளிச்சம். எனவே, பழனிசாமி கூறிய புகார்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது. ஆனால் தமிழக அரசு அந்த அரிசியை வழங்கவில்லை என ஒரு புகாரையும் கூறியுள்ளார். இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் இறுதியில், ஒரு வழிகாட்டுதல் குழுவை தமிழகத்திற்கு வழங்கியது. வழிகாட்டுதல் வேறு, ஒப்புதல் வேறு. அந்த வழிகாட்டுதலின் படி செறிவூட்டப்பட்ட அரிசியை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் டெண்டர் விடபட்டது. அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து ஒப்பந்ததாரர்களின் செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரியின் தரப்பரிசோதனை விவரங்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி உள்ளது. ஆனால் அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
22 சதவீதமாக ஈரப்பத்தை உயர்த்த வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதனை சரி பார்ப்பதற்காக, மத்திய அரசு மூன்று பேர் கொண்ட ஒரு மூன்று குழுவை நியமித்துள்ளது. எனவே, இதையெல்லாம் மறைக்க வேண்டும் என்று பா.ஜ., அரசை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இந்த புகார்களை எல்லாம் தெரிவித்து வருகிறார். டெல்டாவில் ஆண்டுக்கு 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற குறுவை சாகுபடி திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 6.13 லட்சம் ஏக்கர் அளவுக்கு உயர்ந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கடந்தாண்டு குறுவை 1.21 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 2.50 லட்சம் மெட்ரிக் டன் அளவு நெல் கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேளாண் துறைக்கு என ஒரு தனி பட்ஜெட்,நெல்லுக்கான ஊக்கத்தொகையை சரியான நேரத்தில் உயர்த்தி வழங்கியது என திமுக அரசு பல்வேறு திட்டங்களை வழங்கியதால்,தமிழகத்தில், உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் பங்களிப்பை வேளாண் துறை மட்டும் தந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் பழனிசாமி பொய் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகின்றார். அதை மக்களோ, விவசாயிகளோ நம்புவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இல்லை. பொய்யை விதைத்து விவசாயிகளுடைய வாக்குகளை எல்லாம் அறுவடை செய்யலாம் என்கிற பழனிசாமியின் எண்ணம் ஒருபோதும் நடக்காது. இங்கே நடப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு என்ற டெல்டாகாரன் அரசு என்பதை இங்கு இருக்கக்கூடிய மக்கள் நன்கு அறிவார்கள். விவசாயிகளுக்கு நமது அரசு என்றைக்கும் துணை நிற்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.