தருமபுரி அருகே புகார் கொடுக்க காவல் நிலையம் வந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, போக்சோவில் கைதான சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 


தருமபுரி பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர், சிங்கிலிமேடுவை கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி (28) என்பவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேடரள்ளி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது  சிறுமிக்கும் 2020 ம் ஆண்டு குழந்தை திருமணம் செய்யப்பட்டுள்ளது‌. இந்த தம்பதிக்கு தற்போது ரவீன் குமார் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுளுக்கு முன்பு, சிறுமிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, ஏரியூர் காவல் நிலையத்தில் சந்தியா புகார் அளித்துள்ளார். அப்போது ஏரியூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன், (55) விசாரணை அதிகாரியாக இருந்துள்ளார். இந்நிலையில் விசாரணையின் போது சிறுமியின் தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்ட சகாதேவன், முதலில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்துஅதையே காரணம் காட்டி, மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 


இது சிறுமியின் கணவருக்கு தெரிந்து, கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக ஹெல்ப்லைனுக்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை காப்பகத்தில் சேர்த்தனர். தொடர்ந்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன், சிறுமியை சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதற்காக, பழி வாங்கும் நடவடிக்கையாக, சிறுமியை குழந்தை திருமணம் செய்ததாக பழனிசாமி மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

 

மேலும், காப்பகத்தில் இருந்த குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்துள்ள புகாரில் ஏரியூர் காவல் நிலைய சிறப்பு உதவியாளர் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை  பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடி, பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறுமி, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சகாதேவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பென்னாகரம் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

 

இதனையடுத்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சகாதேவனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டுள்ளார்.

 

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன் தருமபுரி நகர காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, திருட்டு வழக்கில் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த, இருசக்கர வாகனங்களை திருடி விற்றதால், கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையில் இருந்து வெளியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.